Thursday, 26 November 2015

இரத்தத்தின் வேகம்...(சிறுகதை)

"ஹே அரவிந்த்..!! அங்க பார் அருண் கார் எவ்வளவு வேகத்துல பறக்குதுன்னு நீ என்னடானா மாட்டு வண்டி போல ஓட்டினு இருக்க" என்று அரவிந்த் கூட இருந்த நிலா கடிந்து கொண்டாள்..

(அருண்,ரீமா, மலர் மற்றும் பிரபு ஒரு காரிலும் அரவிந்த், நிலா,ரீகன் மற்றும் ஹேமா மற்றொரு காரிலும் புத்தாண்டை கொண்டாட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்க்கு சென்று கொண்டிருக்கின்றார்கள்.)

"போகட்டும் போகட்டும் எவ்வளவு தூரம் போய்டுவான்... இப்ப பாரு ஐயாவோட வேகத்த...!!" என்று தன்னுடைய வண்டியின் வேகத்தை கூட்டினான்.

வண்டியில் உள்ள மற்ற நண்பர்கள் அருணையும் அரவிந்தையும் "சூப்பர்....  அப்படி தான்.... அடிச்சு தூக்கு மச்சி ....!!!!"" என்று உற்சாகக் குரலில் கத்திக்கொண்டே ஊக்குவித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் கார்களில் ஒலிக்கும் அந்த ஆடியோ ஒலி அவர்களின் உற்சாகத்தை குறையாமல் பார்த்துக் கொண்டது.

இரண்டு கார்களும் அதிவேகத்தில் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு முந்திக்கொண்டு சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது "போகாதீங்க ..!!!" என்று கணீரென்று ஒரு குரல் கேட்டது. அந்த குரல் அவர்களின் போட்டுக்கொண்டிருந்த சத்தத்தையும் அவர்களின் கார்களில் ஒலித்துக்கொண்டிருந்த அந்த இசையையும் தாண்டி அவர்களின் காதில் சத்தமாய் ஒலித்தது.

அந்த ஒலி கேட்டதும் அடுத்த நொடி "என்ன டா சத்தம் இது" என்று தெரிந்து கொள்ள அவர்களுடைய காரை ரோட்டின் ஓரமாய் நிறுத்தி திரும்பி பார்த்தனர்.

அப்போது அவர்களின் வண்டியில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு சாமியார் நின்று  கொண்டிருந்தார்.
அந்த சாமியார் காவி உடை உடுத்தி கொண்டு,  நீண்ட சடையுள்ள முடியை வைத்துக்கொண்டு,  கழுத்தில் ருத்ராட்சை மாலைகளை போட்டுக்கொண்டு  திருநீரை உடல் மற்றும் நெற்றி முழுவதும் பூசிக்கொண்டு, சந்தனம் மற்றும் குங்குமம் கலந்த பொட்டை வைத்துக் கொண்டு அகன்ற விழிகளோடு அவர்களை உற்று நோக்கி கொண்டிருந்தார்.

அவரை பார்த்ததும் அனைவரும் ஒரு நொடி பயந்தே விட்டார்கள்.

அடுத்து அவர் என்ன சொல்ல போறார் என்ன செய்ய போறார் என்று தெரியாமல் அவரையே பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"உங்கள் வேகத்தை நீங்கள் குறைத்தே ஆகணும். மீறினால் கார் முழுவதும் இரத்தத்தால் நிரம்பும். 140 கி.மீ வேகத்தில் போவதால் ஒரு நன்மையையும் நடக்க போவதில்லை " என்று சாமியார் எச்சரிக்கை கலந்த கட்டளையோடு சொல்லிக்கொண்டே அவர்களுடைய கார்களை நோக்கி நடந்து வந்தார்.

சாமியார் கிட்ட நெருங்க இவர்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. பதற்றத்தோடு காரை விர்ரென்று எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டனர்.

இரு வண்டியும் சம மெதுவாக வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரீகன் "என்னடா சாமியார் இப்படி சொல்றாரு.. இப்ப என்ன பண்ணலாம் டா ?" என பயத்தோடு கேட்டான் .. அதுக்கு அரவிந்த் "டாய் அவன பார்த்தா பைத்தியக்காரன் போல தெரியுது.. இல்ல கொள்ளை அடிக்குற கும்பல் கூட இருக்கலாம். நீ என்னடானா அவன் பேசுன பேச்சலாம் பெரிசா எடுத்துடு பேசிட்டிருக்கனு" என்று திட்டினான்.

அர்விந்த் காரில் உள்ள மற்றவர்களும் அதை ஆமோதித்தார்கள்.

"இல்ல அரவிந்த் அவ்வளவு சுலபமாய் அந்த சாமியார் பேச்சை நினச்சிட வேணாம்னு என் மனசுக்கு தோணுது" என்று அருண் சொன்னான்.

"சரி நீங்க வேணும்னா கட்ட வண்டி ஓட்டிட்டு வர போல வாங்க பா நான் ரிசார்ட்டுக்கு போய் அங்க இருக்கேன்" என்று அர்விந்த் சொல்லிவிட்டு அவர்களின் பதிலுக்கு காத்திருக்காமல்  காரை சர்ரென்று எடுத்துக்கொண்டு கலம்பிவிட்டான்.

"சரி அவன் அங்க போய் இருக்கட்டும். நாம பொறுமையா போகலாம். ஓகே வா ?" என்று கூட இருக்கும் நண்பர்களிடம் கேட்டான். அவர்கள் ஏற்கனவே பயத்தில் இருந்ததால் அருண் கேட்டதற்கு சரி என்று தலையை ஆட்டினார்கள்..

அருணுக்கு அப்போதான் ஞாபகம் வந்தது இரு கார்களும் போட்டிக்கொண்டு வேகமா வரும் போது "ஹே அருண் சூப்பர் டா. வண்டி 140கி.மீ வேகத்துல பறக்குது இப்போ...!  " என்று ரீமா சொன்னது. அந்த சாமியாரும் அவர்கள் வந்த வேகத்த சரியாய் கணித்தது.

உடனே அதை பற்றி தன் நண்பர்களிடம் அருண் சொன்னான். அதை அவர்கள் கேட்கும் போது அனைவருடைய  விழியும் பயத்தில் பெரிதானது.

"அப்போ அந்த சாமியார் சொல்றது போல ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் நடக்க போகுது போல " என்று அருண் மிகவும் பயந்த குரலில் சொன்னான்.

"அப்போ வேகமாய் போய் இருக்க அரவிந்துக்கு கண்டிப்பா ஆபத்து வர போகுது. டேய் பிரபு அரவிந்துக்கு போன் பண்ணி அவன் வண்டிய உடனே நிறுத்த சொல்லு.. எல்லோரும் ஒண்ணா போலாம்னு சொல்லு" என்று அருண் சொன்னான்.

"சரி" என்று பிரபு சொல்லிவிட்டு அரவிந்துக்கு போன் செய்தான். அவனுடைய மொபைல் அனைத்து வைக்கப்பட்டிருந்ததாய் எதிர் முனையில் தெரிவித்தது.

"டேய் அருண் . அரவிந்த் நம்பர் சுவிட்ச் ஆப் டா..!!" என்று பிரபு பதற்றத்தோடு  சொன்னான்.

"ஹே என்னடா சொல்ற " என்று சொல்லிக்கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தினான் அருண்.

இப்போது அவர்களை பயம் முழுவதும் ஆட்கொண்டிருக்கிறது.

"சரி ஹேமா நம்பர்க்கு பண்ணுவோம் " என்று போன் செய்ததும் அந்த நம்பரும் சுவிட்ச் ஆப்.

"அடுத்து நிலா நம்பர்" அதுவும் சுவிட்ச் ஆப்.

கடைசியாய் ரீகன் நம்பருக்கு முயற்சி செய்தனர் அதில் மட்டும் தொலைபேசி அடிக்கும் ஒலி கேட்டது. ஆனால் எதிர் முனையில் இருந்து எந்த பதிலும் இல்லை.

இவர்களுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. "அவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரியலையே" என்று புலம்பினார்கள்.

"மச்சி பிரபு நீ ரீகனுக்கு போன் பண்ணிட்டே வா. நான் ரிசார்ட்டுக்கு போற வழியிலேயே போறேன். " என்று அருண் சொன்னான்.

ரீமாவும் மலரும் அவர்களுக்கு எதுவும் நடக்க கூடாதென்று கடவுளை வேண்டிக்கொண்டே வந்தார்கள்.

ஆனால் அவர்களின் வேண்டுதல் பலிக்காது என்று அவர்களுக்கு தெரியாது.

"ஹே அங்க பாருங்க" என்று ஒரு விபத்தை காட்டி அருண் பதற்றம் கலந்த குரலில் அலறினான்.

உள்ள இருந்த அனைவரும் உற்று நோக்கினார்கள். பார்த்தால் அது அரவிந்த் கார் தான். அவர்களுடைய காரை ஓரமாய் நிறுத்திவிட்டு 4 பேரும் இறங்கி ஓடினார்கள்.

அந்த கார் மரத்தில் மோதி முன் பக்கம் அப்பளம் போல் நொறுங்கி இருந்தது.

விபத்துக்குள்ளான கார் அருகே நெருங்கி பார்த்த பொது அனைவரும் அடி பட்டு இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தனர். உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து வர வழைத்து அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சைக்குப் பின் அரவிந்தும் அவனுடைய நண்பர்களும் உயிர் பிழைக்கின்றார்கள்.

ஒரு மாத ஓய்வுக்கு பின் அனைவரும் மனதாலும் மற்றும் உடம்பாலும் பழைய நிலைக்கு திரும்புகின்றார்கள். அர்விந்தோட காரும் பழுது பார்க்கப்பட்டு புதியது போல் ஆனது.

அர்விந்த் வீட்டு மொட்டை மாடியில் அனைவரும் அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார்கள் அப்போது அரவிந்த் "எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்கடா நான் யார் பேச்சையும் கேக்காம வேகமாய் போய் இப்படி பண்ணிட்டேன். " என்று அழுது கொண்டே சொன்னான்.

"அதெல்லாம் ஒன்றும் இல்லடா விடுடா அதான் இப்போ எல்லாருக்கும் சரி ஆகிடிச்சுல" என்று மற்றவர்கள் அரவிந்தை தேற்றினார்கள்.

"நடுவுல ஒரு நாய் வந்ததால தான் டா உன்னால வண்டிய கண்ட்ரோல் பண்ண முடியாம போச்சி. அதனால என்ன விடு இப்போ " என்று நிலா அவனை தேற்றினாள்.

அரவிந்த் அழுகையை துடைத்துக்கொண்டே "உண்மையிலேயே என்னுடைய தப்புதான் டா  நான் அந்த சாமியார் சக்தியை குறைவா எடை போட்டுட்டேண்டா கொஞ்சம் புத்தியை உபயோகப்படுத்தி இருந்தா கூடநாம இவ்வளவு பெரிய ஆபத்துல சிக்கி இருக்க மாட்டோம்" என்று சொன்னான்.

"என்னடா சொல்ற" என்று புரியாமல் ஹேமா விழித்தாள் .

"ஆமா கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாருங்க நாம எவ்வளவு சத்தம் போட்டு மியூசிக்லா கேட்டுக் கொண்டு போயிட்டு இருந்தோம் ஆனால் அவர் எங்கிருந்தோ சொன்ன "நிறுத்துங்க" நமக்கு எப்படி தெளிவா கேட்டுது?" என்று கேட்டான்.

"ஹே ஆமா இல்ல" என்று சொல்லிக்கொண்டே மலரும் ரீமாவும் ஆச்சரியத்தில் எழுந்து நின்றார்கள்.

"நாம் வந்த வேகத்தையும் அவர் சரியா கணிச்சாறு மச்சி" என்று அருண் சொன்னான். "ஆனால் எனக்கு நீங்க போனதுக்கு அப்புறம் தான் எனக்கு ஞாபகம் வந்தது" என்று மேலும் தெரிவித்தான்.


"அதே போல் வண்டி ரத்தத்துல நிரம்பும்னு சொன்னாரு. நான் உங்க வண்டிய பாக்கும் போது வண்டி இருக்கை முழுசா ரத்தத்தாலே நனைஞ்சி இருந்தது." என்று மேலும் விளக்கினான் அருண்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் அப்போ தான் அந்த  சாமியாரின் அற்புத சக்தி அவர்களுக்கு புரிந்தது.

"அவர் பேச்சை கேட்டதனால அட்லீஸ்ட் நீங்களாவது விபத்துல மாட்டாம இருந்தீங்களே அதுக்காக அவர சந்திச்சி நன்றி சொல்லிட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வரலாம் " என்று அர்விந்த் தெரிவித்தான்.

"அனைவரும் சேர்ந்து அதே இடத்திற்கு அந்த சாமியாரை சந்திக்க சென்றனர்.

பார்த்தால் ரோட்டோரம் சாமியார் அமர்ந்து கொண்டு கையில் எதையோ வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.

சாமியார் முன் அந்த 8 பேரும் போய்  நின்றார்கள்.

சாமியார் அவர்களை ஏற இறங்க பார்த்து விட்டு "என்ன வேணும்" என்ற குனிந்து கொண்டே கேட்டார்.

"இல்ல சாமி போன மாசம் நாங்க இந்த வழியா போகம் போது  நீங்க எங்களை எச்சரிக்கை படுத்தியும் கேக்காம போய் ஒரு கார் விபத்துல மாட்டிகிட்டோம் .. உங்க பேச்சை கேட்டதனால இன்னொரு கார் விபத்துல இருந்து தப்பிச்சிடிச்சு" என்று அருண் சொல்லிக்கொண்டிருந்தான்.

"அதற்கு" என்று சாமியார் இடைமறித்தார்.

"இல்ல சாமி உங்க கிட்ட நன்றி சொல்லிவிட்டு அப்படியே ஆசீர்வாதம் வாங்கிட்டு போலாம்னு வந்தோம்" என்று தெரிவித்தான் அர்விந்த்.

 "சரி.. அந்த இரண்டு கார் நிக்குதே உங்களுடையது தானே? அந்த கார்ல தானே வேகமா போனீங்க?" என்று சாமியார் கேட்டார்.

"ஆமாம் சாமி" என்று அரவிந்தும் அருணும் சொன்னார்கள்.

"சரி அப்போ ஒரு 5000 ரூபாயை என்னிடம் கொடு " என்று சாமியார் கேட்டார்.

அரவிந்துக்கும் மற்றவர்களுக்கும் எதுவும் புரியவில்லை இருந்தாலும் சாமியாரை முழுசா நம்புனதால மறு பேச்சு கேட்காம 5000 த்தை எடுத்து சாமியாரிடம் கொடுத்தார்கள்.

அதை பெற்றுக்கொண்டதும் சாமியார் அந்த இரண்டு காரின் எண்களை பேனா எடுத்து காகிதத்தில் எழுதிக்கொண்டு சின்ன டென்ட் போல ஒரு வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்.

வரும்போது ஒரு காகிதத்துடன் வந்து அதை அவர்களிடம் நீட்டினார்.

அந்த காகிதத்தை அரவிந்த் பெற்றுக்கொண்டு ஆர்வமாய் பிரித்தான் அது என்னவாய் இருக்குமென்று. அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த காகிதத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த காகிதத்தை பார்த்த அவர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு புரியாமல் விழித்தனர்.

"என்னதுங்க சாமி இது" என்று மெல்லிய குரலில் காகிதத்தை நீட்டி சாமியாரிடம் கேட்டான் அரவிந்த்.

"ஆமாம் பா ஓவர் ஸ்பீடுக்கு அபராதம் விதிச்சிருக்கு என்று சாமியார் தெரிவித்தார்.

"என்னங்க சாமி எங்கள ஆசீர்வாதம் பண்ணுவீங்கனு பார்த்தா பைன் போட்டு கொடுக்குறீங்களே" என்று அரவிந்த் கேட்டான்.

"ஆசிர்வாதமா என்கிட்டயா?" என்ற சாமியார் சொல்லி பலமாய் சிரித்தார்.  சிரித்துவிட்டு "போங்கடா பரதேசிங்களா நான் சாமியார்லா இல்ல நான் ஒரு ட்ராபிக் போலீஸ் டா .. வேகமா வர வண்டியா நிறுத்துலாம்னு பார்த்தா எங்க மேலேயே இடுச்சிட்டு நிற்காம போயிடுறீங்க .  இதுவரை ரெண்டு போலீஸ்காரங்க  செத்து போய்ட்டாங்க. அதுக்குதான் உங்கள புடிக்கறதுக்கு இப்படி ஒரு கெட்டப்."

"என்னது கெட்டப்பா" என்று  எல்லோரும் கோரசாக கேட்டனர்.

"ஆமாம் டா கெட்டப் தான் டா அதுக்கு என்னடா இப்போ " என்று கேட்டார் சாமியார் என்ற போலீஸ்.

அவர்களால் அதை நம்பவே முடியவில்லை. "அப்புறம் நீங்க சொன்னதுலாம் எப்படி கரெக்டா நடந்திச்சி நீங்க இங்க இருந்து நிருந்த்துங்கனு சொன்னது எங்களுக்கு எப்படி எவ்வளவு தெளிவா கேட்டிச்சி " என்று அரவிந்த் கேட்டான்.

"தம்பி இங்க பாரு மொத்தம் இந்த ஏரியாவுல  5ஸ்பீக்கர் செட் பண்ணி வச்சிருக்கோம். எங்ககிட்ட இருக்குற இந்த மைக் வச்சி பேசுனா எவ்வளவு வேகமா போற வண்டிக்கும்  தெளிவாக கேட்கும்." என்று மைக்கை காட்டிக்கொண்டே சொன்னார் சாமியார் என்ற போலீஸ்.

எல்லோருடைய கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது.

"அப்போ நாங்க வந்த வேகத்த எப்படி கரக்டா சொன்னீங்க" என்று அருண் விழியை பெரிதாக்கி கேட்டான்.

"போலீஸ்காரன் கிட்ட  ஸ்பீடு ட்ரேஸ் பண்ற மெசின் கூடவா இருக்காது?" என்று சாமியார் வினாவோடு பதில் அளித்தார்.

"அப்போ கரெக்டா விபத்து நடக்கும்னு சொன்னது இரத்தாதாலாயே வண்டி நிரம்பும்னு சொன்னது" என்று ஆச்சரிய கேள்விகளைஅடுக்கினாள் ஹேமா.

"இது என்னடா சின்ன புள்ள தனமான கேள்வியா இருக்கு" என்று சாமியார் சலித்துக்கொண்டே பதில் அளித்தார்.

"ஸ்பீடா போனா விபத்து நடக்கும்மென்ற  அறிவு கூடவா  இல்லாமையா  இருப்பீங்க?" .

"அதுவும் நீங்க போன அளவுக்கு ஸ்பீடா கார் போய் விபத்து நடந்தா இரத்தம் வராம காவிரி தண்ணீரா வரும்" என்று திட்டினார் சாமியார் என்ற போலிஸ்.

"போங்க போங்க போய் இதுக்கு மேலையாவது பார்த்து பத்தரமா ஓட்டுங்க" என்று அறிவுரை சொன்னார்.

இதற்கு மேல் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை எதுவும் கேட்க முடியவில்லை.

எல்லோரும் ஊமையை போல் மௌனமாய் அந்த இடத்தை விட்டு மெதுவாக அவர்களுடைய காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள்..

ஆனால் அவர்களுடைய மனசாட்சி மட்டும் புலம்பிக்கொண்டே வந்தது.

"எவ்வளவு ட்ரிக்சா வேல பார்க்குரானுங்க" என்று.....



Thursday, 5 November 2015

சுமையில் சுகம்....(சிறுகதை)


"ஏ  வேலு ..!!! வண்டில ஏத்துன சிமெண்ட் மூட்டையலாம் இந்த விலாசத்தில போய் இறக்கிட்டு வந்துடு" என்று விலாசம் எழுதிய தாளை சுப்பிரமணி வேலுவிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்...


அந்த விலாசத்தை பிரித்து பார்த்ததும் அது தன் வீட்டருகே உள்ள விலாசம் என்று தெரிந்ததும் தன்னுடைய மீன்பாடி வண்டியை தள்ளிக்கொண்டு  கொஞ்சம் உற்சாகத்துடன் சிமெண்ட் கம்பெனில இருந்து புறப்பட்டான்.

தான் போகும் வழியில் தான் தன்னுடைய மகள் செல்வி படிக்கும் பள்ளி இருப்பதாலும் அதே நேரத்தில் பள்ளி விடும் நேரம் நெருங்கி விட்டதாலும் அவளையும் தன்னுடன் வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று முடிவு செய்து பள்ளிக்கு சென்று அங்கே வெளியே காத்துக் கொண்டிருந்தான்.

வேலு மகள் செல்வி அங்கே இருக்கும்  மாநகராட்சி பள்ளியில் முதலாம்  வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளை சேர்த்த முதல் மாதம் மட்டும் அவளை பள்ளிக்கு விட்டு அழைத்து வந்தார்கள். அதன் பின் அவள் வீட்டருகே அருகே பள்ளிக்கு போகும் மாணவர்களோடு போய் வர பழகிக் கொண்டாள்..

செல்வி பள்ளி விட்டு வெளியே வந்தாள்.
அப்போது ஓரமாய் இருந்த வேலு  "அம்மா செல்வி .... அம்மா செல்வி " என்று கூப்பிட்டான்.

செல்வி திரும்பி பார்த்ததும் தன் தந்தை அங்கே நின்று கொண்டிருப்பது தெரிந்ததும் "அப்பா" என மகிழ்ச்சியில் கத்திக்கொண்டே தாவி குதித்து ஓடி வந்து வேலுவின் கழுத்தை இறுக கட்டிக்கொண்டாள்.

தன் மகளை சிமெண்ட் மூட்டையில் மீது ஒரு துணியை போட்டு அதன் மீது  அமரவைத்தான். "அம்மு குட்டி  போலாமா " என்று செல்லமாய் கேட்டான்.

"போலாம் பா " என்று என்று சிரித்துக்கொண்டே சொன்னாள்...

பள்ளியில் விளையாடிய விளையாட்டை தன் தந்தையிடம் விவரித்துக்கொண்டே வந்தாள் . வேலுவும் ஒ அப்படியா..!!! அப்புறம் நடந்தது யாரு ஜெயிச்சீங்க என்று தன் மகளிடம் சந்தோசத்தோடு பேசிக்கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

அப்போது ஒரு மேம்பாலம் குறுக்கிட்டது.

அவர்கள் வீட்டுக்கு சென்றடைய அந்த மேம்பாலத்தை அவர்கள் கடந்தாக வேண்டும். அவன் வண்டியிலிருந்து இறங்கி அந்த வண்டியை மேம்பாலத்தில் தள்ளிக்கொண்டு ஏற்றினான்.

மேம்பாலம் கொஞ்சம் உயரமாக இருந்ததால் வேலு மிகவும் கஷ்டப்பட்டு வண்டியை இழுத்துக்கொண்டு ஏற்றிக்கொண்டிருந்தான்.

இவ்வளவு நேரம் பேசிக்கொண்டே வந்த தந்தை திடிரென்று பேசாமல் இருந்ததை பார்த்து அவரை உற்று நோக்கினாள் செல்வி. வேலு முகம் முழுவதும் வியர்வையால் நனைந்து கொண்டிருந்தது. மூச்சியும் அதிகமாய் வாங்கி கொண்டிருந்தது.

இதை பார்த்த செல்விக்கு என்ன  செய்வதென்றே தெரியவில்லை. ஏதோ ஒன்று நினைத்தவளாய் திடிரென்று எழுந்து தன்னுடைய புத்தகப்பையை தலை மேல் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் நின்றாள்.

இதை பார்த்த வேலுக்கு ஒன்றுமே புரியவில்லை. வண்டியுடைய பிரேக்கை பிடித்துக்கொண்டு "என்னமா ஆச்சு?" என்று பதறியபடி கேட்டான்.

அதற்க்கு செல்வி  "ஒன்னும் இல்லபா ஏற்கனவே வண்டி ரொம்ப பாரமா இருக்கு. அது பத்தமா நானும் என்னுடைய பையும் பாரமா இருக்கும்ல. அதான் பையை தூக்கி என் தலைமேல வச்சிகினா உங்களுக்கு எடை கம்மியா இருக்கும் அது போல ஒத்த கால்ல நின்னா பாதி எடை கொரைஞ்சிடும்ல. அப்புறம் நீங்க சுலபமாய் வண்டியை தள்ளலாம்ல" அப்பாவியாய் தன் மழலை குரலில் வேலுவிடம் சொன்னாள் ...

இதைகேட்ட வேலுவுக்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் லேசாக வந்தது.

அதை துடைத்து கொண்டே  "அப்படியா சொல்ற அப்போ நீ சொல்றது சரியாதான் இருக்கும். ஆனா நீ ஒத்த காலில் நிற்க வேணாம், நீ உட்கார்ந்து கொண்டே பையை மடிமேல வச்சிக்கோ! அப்பவும் நீதானே எடையை தூக்கினு இருக்க.. அப்படி செஞ்சா வண்டி தானா கஷ்டப்படாம போய்டும் " என்று மகளிடம் சொன்னான்.

அவளும் அதை ஆமோதித்து வேலு சொல் படியே நடந்தாள்.

தன் மகளுக்கு தான் கஷ்டப்படுவது தெரிய கூடாது என்று "அப்புறம் உங்க விளையாட்டுல என்னமா நடந்தது ? யாரு ஜெயித்தது என்று அப்பாகிட்ட சொல்லவே இல்லையே " என்று கேட்டான்.
"ஓ சொல்லலையா சரி சரி சொல்றேன் " என்று தான் விளையாடிய விளையாட்டை தொடர்ந்து விவரிக்க ஆரம்பித்து விட்டாள் செல்வி.

மறுபடியும் அப்பாவும் மகளும் ஜாலியாய் பேசிக்கொண்டே தன் வேதனையை  வேலு முகத்தில் மட்டும் காட்டாமல் அந்த மேம்பாலத்தை மெதுவாய் ஏறி முடித்தான்...

Monday, 2 November 2015

ஐந்து வாக்கியங்கள் வெவ்வேறு அர்த்தங்கள்.

ஐந்து வாக்கியங்கள் வெவ்வேறு அர்த்தங்கள்.

1)
நான் என்ற வார்த்தை
சில நேரங்களில்
தன்னம்பிக்கையையும்
பல நேரங்களில்
அகங்காரத்தையும் வளர்க்கிறது...!!!

2)
உன் கஷ்டத்தை
காது கொடுத்து கேட்க பலர்
தயாராக உள்ளனர்
அது உன் பிரச்சனையை
தீர்க்க அல்ல
அதை கேட்டு அவர்கள் ஆனந்தப்பட...!!!

3)
நல்லது செய்யும் போது
வரும் தடங்கல்
கெட்டது செய்யும் போது
வருவதில்லை...!!!

4)
பணம் மட்டுமே
நண்பனையும் பகைவனையும்
ஒரே நேரத்தில் உருவாக்கும் ...!!

5)
பேருந்து பயணத்தில்
முடியாதவர்களுக்கு
இருக்கை கொடுக்க
நம் மனம்
மட்டுமே எழுகிறது...!!!


------------------------------------------------------------------

உன்னை பற்றி
ஒருவரும் 
ஒரு குறையும் 
சொல்லவில்லை என்றால் 
நீ தவறான 
இடத்தில் இருக்கிறாய் 
என்பதை புரிந்து கொள்...!!!