Sunday, 31 January 2016

குழந்தையின் ஏக்கம்(சிறுகதை)

"என்னங்க பண்றது. பையன் திடீர் திடீரென்று அழுவுறான்.  எத்தனை டாக்டரிடம் போய் பார்த்தாலும் எல்லாரும் சொல்லி வச்சப் போல எல்லாம் செக்கப்பும் பண்ணிட்டு ஒண்ணுமே இல்லைன்னு சொல்றாங்க.
என்ன தான் பண்றதுன்னு புரியவே மாட்டுதே." என்று கண் கலங்க ரம்யா தன் கணவன் மதிவாணனிடம் சொல்லி அழுதுக்கொண்டிருந்தாள்.

"அதையே தான் மா நானும் யோசிச்சிட்டு இருக்கேன். எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியலை. நம்ம வேலைக்காரி கிட்ட கேட்டாலும் அவளுக்கும் எதுவும் தெரியலை" என்று மதிவாணன் சொன்னான்.


மதிவாணனும் ரம்யாவும் ஒரு பிரபல நிறுவனத்தில் பொறியாளராய் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அவினேஷ் என்ற 31/2 வயது மகன் இருக்கிறான்.

மறுபடியும் அவினேஷின் அழுகை கேட்டது. இருவரும் ஓடி போய் பார்த்தார்கள்.

அவர்களை பார்த்ததும் சிறிது நேரம் அழுதுவிட்டு மறுபடியும் அழுகையை நிறுத்தினான்.

"என்னங்க பேசாம உங்க அம்மாவையும் அப்பாவையும் நடந்த பிரச்சனையை மறந்து விட்டு நம்ம கூட இருக்க சொல்லுங்களேன்" என்று மதிவாணனிடம் வேண்டுகோள்  விடுத்தாள்.

"சரி" என்று ரம்யாவிடம் சொல்லிவிட்டு மதிவாணன் அவனுடைய பெற்றோரிடம் நடந்ததை சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தான்.

அன்று தாத்தாவிடம் விட்டு விட்டு வேலைக்கு சென்ற இருவருக்கும் அங்கு வேலை ஒடவில்லை. இப்போ பையன் எப்படி இருக்குறானு தெரிந்துக்க ஏக்கம் வந்ததால் ரம்யாவும் மதிவாணனும் வேலையை அரைநாள் நாள் லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்கள்.. அப்போது அவினேஷ் மிக சந்தோசமாய் தன் நண்பர்களுடனும் தன் தாத்தாவுடனும் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்த இவர்களுக்கு ஒரே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி என்ன பையன் இவ்வளவு சந்தோசமாய் இருக்கானே என்று.

"டேய் குட்டி பையா. இங்க வாடா " என்று தாத்தா அவிநேஷை அழைத்தார்.

"என்ன தாத்தா" என்று ஓடி வந்தான்.

"எப்படி இருந்தது விளையாட்டு" என்று கேட்டார்.

"ஜாலியாய் இருந்துது தாத்தா. மறுபடியும் விளையாடலாமா" என்று கேட்டான்.

"வா நாம வேகமா போய் சாப்பிட்டு வந்து விளையாடலாம்". என்று சொல்லி வீட்டுக்கு அழைத்து சென்றார்.

 பாட்டி சோற்றை பேரனுக்கு ஊட்ட  தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு அவினேஷ் சந்தோசமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

"டேய் குட்டி பையா. தாத்தாவுக்கு ஒரு சந்தேகம் டா" என்றார்.

"என்ன தாத்தா" என்றான்.

"இப்ப ஜாலியா விளையாடுற நீ அப்போவெல்லாம் எண்டா திடீர் திடீரென்று அழுதுன்னு இருந்த" என்று கேட்டார்.

திடிரென்று அவினேஷ் முகம் இறுக்கமாகவும் சோகமாகவும் மாறியது.

"என்ன பா" என்றார் தாத்தா.

"இல்ல தாத்தா. அம்மா அப்பா வீட்டுக்கு வந்தா டிவி தான் போட்டு பாப்பாங்க. அப்படி இல்லனா மடில சின்ன டிவி வச்சி (லேப்டாப்பை சொல்ல வர்றான்) ஏதோ  பண்ணினு இருப்பங்க. இல்லைன்னா போன வச்சி யார் யார் கூடவோ பேசினு இருப்பாங்க.. ஏன் கூட அவ்வளவா பேசவே மாட்டாங்க. 

வாமா வாபா விளையாடுலாம்னு கூப்டா பொம்மை கூட விளையாட சொல்லுவாங்க.

எனக்கு கஷ்டமா இருக்கும். ஒரு நாள் நான் ஒடும் போது கீழ விழுந்துட்டேனா அப்போ ஒ-னு அழ வேண்டியதா போச்சி அப்போ  அம்மாவும் அப்பாவும் ஓடி வந்து என்ன தூக்கி அவங்க பக்கத்துல வச்சிகிட்டாங்க.

அப்போதான் எனக்கு புரிஞ்சுது அப்போ நான் சத்தம் போட்டு அழுதா தான் நம்ம பக்கத்துல இவங்க வருவாங்கனு.

அதான் அப்பா அம்மா கிட்ட எப்போலாம் கூட இருக்கணும்னு தோணுதோ அப்போலாம் அழுவேன். அவங்களும் ஓடி வருவாங்க. எனக்கு சந்தோசமா இருக்கும்" என்று தன் மழலை குரலில் அவினேஷ் சொல்லி முடிச்சான்.

இதை கேட்ட  அவினேஷின் தத்தாவுக்கும் பாட்டிக்கும் கண்கள் கலங்கியே விட்டது.


 மதிவாணனும் ரம்யாவும் இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கதவருகே நின்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்... அதை கேட்டதும் நம்ம பையனுக்குள்ள இவ்வளோ ஏக்கம் இருப்பதை நாம் உணராமல் விட்டு விட்டோமே என்று வருந்தி அவர்களுடைய இருவர் கண்ணிலிருந்து கணணீர் அருவி போல ஓட ஆரம்பித்தது...

Thursday, 28 January 2016

உனக்காக நானே (கவிதை)


உன் விழியை நானும் தானே பார்த்தேனே பார்த்தேனே
காதல் என்ற ஒன்றை நானும் கண்டேனே கண்டேனே
உன்னை விட்டு நானும் பிரிந்து போக மாட்டேன் என்றேனே
பிரிந்தாலும் என் உடல் மட்டும் தான் பிரியும்
                                                                                    என்று சொல்வேனே நானே நானே ..!


உனக்காக நானே ஆகாயத்திலே தானே
கோட்டை ஒன்றை எழுப்புவேன்
அதில் அரசியாய் உன்னை  ஆக்குவேன்.

உன்னை எப்பொழுதும்
என் கண்ணில் வைத்து நானே காப்பேன்.
உன் காவலனாக காதலனாக
 இருப்பேனே பெண்ணே நானே ...!!  (உன் ...)

நீ தூங்கும் போது தூங்காமல்
என்றும் ரசிப்பேன் நானே உன்னையே

நீ நடக்கும் போது உன் கால்கள் வலிக்காமல்
 உன் பாதத்தை நானே தாங்குவேன் பெண்ணே..

மழை சாரலிலே நீ இருக்கையிலே
மழை துளியும் பனித்துளியாய் மாறியதே ...

கடற்கரையிலே நீ இருக்கையிலே
புயல் கூட தென்றலாய் மாறிடுமே....  (உன் ...)

என் சோகம் கரைந்திடுமே
உன் புன்னகையை நான் பார்த்தாலே..

என் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கிடுதே
என் அருகில் நீ இருந்தாலே....

நீயும் நானும் ஒன்றாக என்றுமே இருப்போமே
இணை பிரியாமல் கூடலும் ஊடலும் புரிந்து வாழ்வோமே...!!! (உன் ...)

Tuesday, 19 January 2016

சேட்டின் நாணயம் (சிறுகதை)


"என்னங்க. இந்தாங்க இந்த காச எடுத்துட்டு போய் அந்த சேட்டு கிட்ட வச்ச 2 1/2 சவரன் நகையை மீட்டுக்கொண்டு வாங்க" என்று கணவன் மதனுக்கு கட்டளையை பிறப்பித்தாள் பத்மா..

"இப்போ நகைய மீட்டுறதுக்கு என்ன அவசரம் பத்மா. இன்னும் நாள் இருக்கே. நமக்கு வந்த லாபத்த வேற எதுக்குனா உபயோகப்படுத்திகலாம்ல" என்று மதன் சொன்னான்.

"என்னங்க சொல்லுறீங்க. 3 நாள் பெஞ்ச மழையில சென்னைல எல்லாம் கடையையும் இழுத்து மூடிட்டாங்க. 2 நாளைக்கு அப்புறம் இன்னைக்கு தான் எல்லாம் கடையை மறுபடியும் திறந்துனு இருக்காங்க. அதுல வேற மறுபடியும் மழை பெய்யும்னு செய்தில போடுறாங்க."

"அதுக்கு" என்று மதன் இடைமறித்தான்.

"அந்த சேட்டு வெள்ளம் அதிகமாகுதுன்னு நகையை தூக்கிகிட்டு அவன் சொந்த ஊருக்கு ஓடிட்டனா என்ன பண்றது. அதான் போய் வாங்கிட்டு வர சொல்றேன். " என்று பத்மா விளக்கினாள்.

"நீ சொல்றதும் சரிதான்." என்று பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு பைக் எடுத்துக் கொண்டு களம்பி அடகு கடையை அடைந்தான்..

மதன் வீட்டுக்கும் அடகு கடைக்குமான தொலைவு குறைந்தது 5 கி.மீ இருக்கும்.

நல்ல வேலை கடை திறந்து இருந்தது.

"வணக்கம் சேட்டே. என்ன சேட்டே இங்குலாம் மழை தண்ணி தேங்கலையா" என்றான் மதன் .

"வணக்கம் பா. இங்க முட்டி வர தண்ணி நின்னுது பா. இரண்டு நாள் கழிச்சி இப்பதான் கடையை திறக்குறேனா பார்த்துக்கோ." என்றார் சேட்டு.

ஓ அவ்வளவு தண்ணீர் நின்னுச்சா. சரி சரி இந்த ரசீதுல இருக்குற நகைய மூட்டனும் என்று சொல்லி ரசீதை நீட்டினான் மதன்.

"ரசீதை வாங்கி பார்த்துவிட்டு. நீ காச கட்டிவிட்டு  நாளைக்கு காலைல 8 மணிக்கு வந்து நகையை வாங்கிக்கோ பா"  என்றார் சேட்டு,

"அது எப்படி சேட்டே நகை வாங்காம காசு கொடுக்க முடியும். நீ வழக்கமாய் உடனே கொடுத்துடுவியே. இப்ப என்ன ஆச்சு" என்று கேட்டான் மதன்.

"அது ஒன்னும் இல்ல பா. மழை தண்ணி வேற அதிகமாய் வந்துச்சி. அந்த தண்ணிலாம் கடைக்குள்ள போய்டிச்சினா நகை எல்லாம் வீணாய்டும். அது பத்ரமாய் இருக்கட்டும் என்று என் வீட்டுக்கு எடுத்துட்டு போய் வச்சிக்கிட்டேன். என் வீடு இரண்டாவது மாடி என்பதால் தண்ணி வேற உள்ள வராது." என்றார் சேட்டு .

எப்படி காசை கட்டிவிட்டு போவது என்று ஒரு நிமிடம் யோசித்தான். அப்பொழுது தான் அவனுக்க ஞாபகம் வந்தது. எந்த அரசியல் வாதிகளும் உதவி செய்யாத வட சென்னையில் மார்வாடிகளும் ஜெயின்களும் கொட்டும் மழையில் 3 நாளும் உணவை அவர்களே தயார் செய்து அணைத்து மக்களிடமும் கொண்டு போய் சேர்த்ததை பற்றி தன் நண்பன் ரமேஷ் அவர்களை பற்றி பெருமையாய் சொன்னது.

அந்த நினைப்பு வந்ததும் வேறு எதுவும் யோசிக்காமல் உடனே சரி என்று ஒப்புக்கொண்டு பணத்தை சேட்டிடம் கட்டி விட்டு ரசீது கூட வாங்காமல் வீட்டுக்கு புறப்பட்டான்.

பாதி வழியில் மனைவியிடம் இருந்து போன் வந்தது.

"என்னங்க. நகையை வாங்கிட்டீங்களா" என்று கேட்டாள் பத்மா.

அங்கு நடந்ததை மனைவியிடம் விளக்கினான்.

உடனே மனைவி "நீ என்ன முட்டளாயா... உனக்கு அறிவில்ல. ஏற்கனவே ரெண்டு நாள் கழிச்சி இப்பதான் கடை தொறந்ததா அவனே சொல்லி இருக்கான். இன்னைக்கு இரவு மழை வந்தா மறுபடியும் எப்படி கடைய அவன் திறப்பான்.  "  என்று மனைவி பத்மா கணவனை வசை பாடிக்கொண்டிருந்தாள்.

மனைவி சொல்வது உண்மை போல் இருந்ததால் "இப்போ என்ன பண்ணலாம்." என்று மனைவியிடமே கேட்டான்.

"மரியாதையாய் போய் நகை இல்ல பணத்த வாங்கிட்டு வா. " என்று கண்டிப்போடு சொன்னாள்.

சரி என்று ஒப்புக்கொண்டு தன் பைக்கை திருப்பிக்கொண்டு அடகு கடைக்கு விரைந்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் கடை பூட்டப்பட்டிருந்தது.

அவனக்கு பயமும் பதற்றமும்தொற்றிக்கொண்டது. "அடப்பாவி 10நிமிட முன்னாடி தானே காச கொடுத்தேன் அதுக்குல்லவா மூடிடுவான். ஒருவேளை காசை தூக்கிட்டு ஓடிட்டானோ." என்று மனதுக்குள் பிதற்றிக்கொண்டிருந்தான்.

நகைய சேட்டு திருப்பி கொடுப்பானா  என்ற பயம் போய் மனைவிய எப்படி சமாளிக்கறது என்று யோசித்தான். ஒரு யோசனையும் கிடைக்கவில்லை.

வீட்டினுள் பயத்தோடு நுழைந்தான்.

மனைவி என்ன ஆச்சு என்று கேட்டாள். இவன் நடந்ததை சொன்னான்.
அவ்வளவு தான் கெட்ட கெட்ட வார்த்தைகளால் மதனுக்கு அர்ச்சனை துவங்கியது அது இரவு 10 மணி வரை நீடித்தது.


திட்டிக்கொண்டே பத்மா தூங்கிவிட்டாள். ஆனால் மதனுக்கு பயம் அதிகமாய் இருந்ததால் தூக்கம் வரவில்லை அதற்கு காரணம் மழை மேகம் வானத்தை வேற சூழ்ந்து கொண்டிருந்தது.

மழை வர கூடாது என்று கடவுளை மதன் வேண்டிக்கொண்டிருக்க ஆரம்பித்தான். ஆனால் அவன் வேண்டுதலுக்கு நேர்மாறாய் நடந்தது.

கன மழை சென்னையை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் அது நீடித்துக் கொண்டே இருந்தது. காலை 3.30மணிக்கு தான் அவனுடைய கண்கள் தானாய் தூங்க ஆரம்பித்தது.

அவன் கழித்து பார்க்கும்போது மணி காலை 7.45. அடப்பாவி சேட்டு 8 மணிக்கு வர சொன்னாேன என்று சட்டையை வேகவேகமாய் மாட்டிக்கொண்டு பைக்கை எடுத்துக்கொண்டு  கலம்பினான்.

வழியெல்லாம் வெள்ளம் அதிகமாய் இருந்ததால் வண்டி மெதுவாய் நீதிக்கொண்டு சென்றது.

இன்னும் 100 மீட்டரில் தான் கடை உள்ளது. ஆனால் மழை தண்ணி அதிகமாய் உள்ளதால்  இதற்கு மேல் அவனுடைய வண்டி செல்ல முடியாது.



அதனால் இறங்கி நடக்க ஆரம்பித்தான். அவன் நடக்க நடக்க மழை தண்ணி அதிகமாய் ஏற ஆரம்பித்தது.


காலில் ஆரம்பித்து, முட்டி, தொடை என்று ஒவ்வொரு 10 மீட்டருக்கும் தண்ணி ஏறியது.

எப்படியும் சேட்டு கடையை திறந்து இருக்க மாட்டான் என்று முடிவு செய்து பயத்தோடும் பதற்றத்தோடும் கடையை நெருங்கினான்...

அப்பொழுது மணி காலை 8.30ஆக இருந்தது.

அவன் கடையை நெருங்க தேங்கிய தண்ணீர் இடுப்புக்கும் மேல் இருந்தது.

இவனுடைய யூகிப்பு சரியாய் இருந்தது சேட்டு கடை அடைக்கப்பட்டிருந்தது. மழை தண்ணீர் கடை உள்ளே போய் வெளியில் வருவதாய் இருந்தது .

"அவ்வளவு தான் நாம தொலைந்தோம். மனைவி சரியாய் கணித்தாள். அப்பவே அவள் பேச்சை கேட்டிருக்கணும். இல்ல காசு கொடுக்கறதுக்கு முன்னாடி போன் பண்ணி கேட்டு கொடுத்திருக்கணும். இப்படி சொந்தமா முடிவெடுத்து எமாந்துட்டமோ. இன்னைக்கு என்னலாம் பண்ண போறாளோ" என்று மனதுக்குள் புலம்பி தள்ளிக்கொண்டிருந்தான்.

கடையிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒருவர் இடுப்புக்கு மேல் உள்ள தேங்கிய தண்ணீரில் குடை பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்.


அவர் யார் என்று கிட்ட நெருங்கி மதன் பார்க்க இவனுக்கு பேரதிர்ச்சி அது சேட்டுவே  தான் இடுப்பளவு தண்ணீரில் மழையினில் குடை பிடித்து நின்று கொண்டிருந்தார்.

அவர் மதனை பார்த்ததும் "என்ன பா 8 மணிக்கு வர சொன்னா இவ்வளவு லேட்டா வர. சரி இந்தா உன் நகை புடி" என்று நகையை மதன் கையில் கொடுத்தார்.

"நகையெல்லாம் சரியாய் இருக்கணு பார்த்துக்கோ பா" என்றார் சேட்டு.

மதன் சரியாய் இருப்பது போல் தலையாட்டினான்.

"நல்லது" என்று சொல்லிவிட்டு சேட்டு தன் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார்.

மதன் விழியில் லேசாய் கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்க்க அவர் போன பாதையை பார்த்து பெரியதாய் கை எடுத்து கும்பிட்டு நன்றி தெரிவித்தான்.


Wednesday, 13 January 2016

வெற்றிக்காக ஒரு போராட்டம் (சிறுகதை)


 "இதுதான் உன் வாழ்க்கையின் கடைசி ரேஸ் நீ  இதுல ஜெயிச்சே  ஆகணும் இல்லேன்னா நீ இந்த உலகுத்துல உயிர் வாழ்வதே வீண் தான்.

இதுவரை பட்ட அவமானங்களுக்கு நீ பதில் சொல்லும் நேரம் இது தான். உன் இரத்தத்தின் கடைசி துளி கீழே விழும் வரை நீ போராடி ஜெயிச்சாகனும்" என்று ராஜாவின் மனசாட்சி அவனிடம் பேசிக்கொண்டே இருந்தது.


பந்தயத்தில்  ஓட அனைவரும் (மொத்தம் 7 பேர்) தயாராக ஒரே நேர் கோட்டில் நின்று கொண்டிருந்தார்கள். ராஜாவின் முகத்திலிருந்த வேர்வைத்துளிகள் பூமியை நனைத்துக்கொண்டிருந்தது.

"இங்க எல்லோரும் கவனிங்க பா இது தான் விதிமுறை அங்க தெரியிற அந்த போஸ்ட் கம்பிய தொட்டு இங்க திரும்பவும் வரணும். யாரையும் இடிச்சினு ஓட கூடாது. அப்படி மீறி ஜெயிச்சா கூட அது செல்லாது. அடுத்த ரேசுக்கு சேத்துக்க மாட்டோம்." என்று நடுவர் (6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்) விதிமுறைகளை சொல்லிக் கொண்டிருந்தார்.

(ராஜாவுக்கு 51/2 வயதும் அவனுடைய அண்ணனுக்கு 7 வயதும் ஆகிறது. வீதியில் நண்பர்களுக்கிடையே அடிக்கடி இந்த மாதிரி ரேஸ் நடக்கும். அதில் ராஜுக்கும் அவன் அண்ணனுக்கும் தான் மிகப்பெரிய போட்டியாக இருக்கும். அதில் பெரும்பாலும் ராஜாவின் அண்ணன் தான் ஜெயிப்பான். எவ்வளவு போராடியும் மற்றவர்களை ஜெயிக்க முடிஞ்ச அவனால் அவனுடைய அண்ணனை மட்டும் ஜெயிக்க முடியவில்லை இரண்டாம் இடம் தான் வர முடிகிறது. )

அவர்கள் விளையாடுவதை ராஜாவின் அம்மா பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.

ஒன்னே,ரெண்டே என்று என நடுவர் கணக்கை தொடங்கினார்.

மூன்று (3) என கேட்டதும் அனைவரும் வேகமாய் ஓடினார்கள். ராஜா அவனால எவ்வளவு வேகமாக ஒட முடியுமோ அவ்வளவு வேகமாஓடிக்கொண்டிருந்தான்.

அவன் எவ்வளவு வேகமா ஓடியும் வழக்கம் போல ரேஸ்ல தோத்து போய்ட்டான்.

பக்கத்திலையே அவங்க அம்மா இருந்ததால் இன்னும் அவமானமாய் இருந்தது. அதனால் ஓ-வெனு அழ ஆரம்பிச்சிட்டான்.

"அம்மா அண்ணன் தோக்கவே மாற்றான் மா எப்ப பாரு அவனே ஜெயிச்சினே இருக்கான் மா" என்று அண்ணனை கை காட்டி திட்டிக்கொண்டே முறையிட்டு அழுது கொண்டிருந்தான்.

அம்மா ராஜாவை சமாதானப்படுத்தி "டேய் தம்பிக்காக ஒரு முறை தோக்க வேண்டியது தானே" என்று அம்மா தன் பெரிய மகனிடம் கடிந்து கொண்டாள்.

"நான் தோத்தா அவன் ஓவரா பண்ணுவான் மா" என்று ராஜாவின் அண்ணன் பதில் சொன்னான்.

 "அதுலாம் ஒன்னும் பண்ண மாட்டான். நீ ஒரே ஒரு முறை தோத்து போ" என்று அம்மா கேட்டுக்கொண்டாள்.

"சரி" என்று அம்மாவிடம் ராஜாவின் அண்ணன் சொல்லிவிட்டு ரேசுக்கு சென்றான்.

மறுபடியும் ரேஸ் ஆரம்பமாகியது.

ஒன்று இரண்டு மூன்று என நடுவர் கணக்கு தொடங்கி முடிந்ததும் வேக வேகமாய் இருவரும் ஓட தொடங்கினார்கள். இந்த முறை அவன் அண்ணன் விட்டுக்கொடுக்க இராஜா ஜெயித்து விட்டான்.

அவ்வளவு தான் ராஜா தன் கொண்டாட்டத்தை தொடங்கினான்.
"ஊ ஊ" வென்று கத்திக்கொண்டு அவனுடைய அண்ணனை வெறுப்பேற்ற தொடங்கினான்.

" நான் யாருனு தெரியும்ல .. என்னலாம் ஜெயிக்க முடியுமா? என் கிட்ட மோதி உன்னால இனி ஜெயிக்க முடியாது டா. " என்று சொல்லிக்கொண்டே தன் தொடையில் தட்டி அவன் வீராவேசத்தை காட்டினான்.

"என் கிட்டலாம் இனிமேல் வெச்சிக்காத ... கலம்பு கலம்பு இந்த இடத்த விட்டு கலம்பு" என்று அவன் அண்ணனை மிரட்டி விட்டு தன் நண்பர்களுடன் கொண்டாட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

இப்போ ராஜாவின் அண்ணனுடைய முறை.

' ஓ-வென்று கத்தி அழுது கொண்டே அம்மா கிட்ட போய் "இதுக்கு தான் நான் தோக்க மாட்டணு சொன்னேன் பார்த்தாள எப்படி பண்றான்னு" என்று சொல்லிக்கொண்டே அம்மாவை போட்டு அடித்து கொண்டிருந்தான்.

"விடுடா விடுடா செல்லம்  தம்பி தானே. அங்க பாரு அவன் எவ்வளவு சந்தோசமா இருக்கான்"என்று தனது  மூத்த மகனை மார்போடு அணைத்து அவன் முகத்தை திருப்பி காண்பித்தாள். தம்பியின் சந்தோசத்தை பார்த்ததும் ராஜாவின் அண்ணன் மனம் லேசாய் சமாதானத்துக்கு திரும்பியது.