Friday, 16 September 2016

துணைவி (சிறுகதை)

விமலாவின் அக்கா ஊரிலிருந்து இரவு 12 மணிக்கு அவள் வீட்டுக்கு வரும்வழியில் தன் தங்கையோட கணவன் பாலியல் தொழிலாளியை பைக்ல கூட்டிட்டு போறத பார்த்துடுறாங்க.

விமலாவின் வீட்டுக்கு சென்றதும் முதல் வேலையாய் அவளிடம் சொன்னாள் அக்கா. அவள் அதை கொஞ்சம் கூட பெரியதாய் எடுத்துக்கவில்லை. அது வேற ஏதாவது  முக்கியமான காரணமாய்  இருக்கும் நீ கவலை படாதேன்னு அக்காவிற்கே சமாதானம் சொன்னாள் விமலா.

அந்த பதிலை கேட்டு அக்கா கொதித்தாள் விமலாவை திட்டினாள். "உலகம் தெரியாமல் இருக்கியே. யாரையும் நம்பிடாதே வந்ததும் உன் புருஷன் கிட்ட கேளு" என்று சொன்னாள்.

ஆனாள் விமலாவோ "ஏதாவது முக்கியமா இருந்தா அவரே என் கிட்ட சொல்லுவாரு இல்லனா சொல்ல மாட்டாரு. அதை நான் கேட்டு அவர் மனச காயப்படுத்த விரும்பல" என்று சொன்னாள்.

அந்த விளக்கத்தை  விமலாவின் அக்காவாள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதனால் தங்கையின் கணவன் வரும்போதும் போகும்போதும் அவனை ஒரு மாதிரியாய் திட்டிக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள்  அக்கா.

ஏன் இப்படி பேசுறாங்க என்று அவன் புரியாமல் விழித்தான். அதை அவன் தன் மனைவியிடம் கேட்டான். "தெரியலங்க" என்று சொல்லி சமாளித்தாள்... அந்த அளவுக்கு அவன் மீது பாசம் கலந்த நம்பிக்கை.

ஒருநாள் விமலாவும் அவளுடைய அக்காவும் கடைக்கு சென்று திரும்பி வரும்போது எதேர்ச்சையாய் ரோட்டில் அதே பாலியல் தொழில் செய்யும் பெண்ணை பார்த்தார்கள். 

அவளை பார்த்ததும் விமலாவுடைய அக்கா அவளை அசிங்கமாய் திட்ட அந்த பெண் லேசான கண்ணீர் துளிகளோடு "அன்னைக்கு எனக்கு திடீரென கால்ல அடிபட்டுடுச்சு கா. கைல காசு இல்ல. ராத்திரி 12 வேற இருக்கும் அந்த நேரத்துல யாருமே இல்ல. அப்போதான் உங்க கணவர் வந்தார். வந்ததும் அவரிடம் காசு கேக்காமல் அதுக்கு தான் கூப்பிட்டேன் . என்னை அவர் பார்த்ததும் நான் என்ன நிலமைல இருக்கேனு புரிஞ்சிக்கிட்டு விவரத்த கேட்டாரு. சொன்னேன். உடனே என்னை பைக்ல கூப்டுட்டு போய் என்ன ஹாஸ்பிடல்ல சேர்த்தார் கா.  நான் குணமானதும்  வேற எங்கனா வேலைக்கு போறீயான்னு கேட்டாரு?.  நான் சரி சொன்னதும் ஒரு எடத்துல சொல்லி வேலை வாங்கி கொடுத்தாரு...

இப்பா நான் கொஞ்சம் கௌரவமான வாழ ஆரம்பிச்சிட்டேன்.. எல்லாம் அவரால தான் என்று சொல்லி முடித்தாள்".

விமலா அவளுடைய அக்காவின் பக்கம் திரும்பி "இது தான் என் புருஷன்" என்று அவளிடம் அக்காவிடம் கம்பீரத்துடனும்  பெருமையுடனும் சொன்னாள்.

அவளுடைய அக்கா வெட்கி தலை குனிந்தாள். 

Monday, 8 August 2016

பலூன் வியாபாரி (குறுங்கதை)

"பலூன் எவ்வளவு பா?" என்று கணேசன் கேட்டான்.

"20 ரூபா சார்" என்றான் பலூன் வியாபாரி.

"என்ன பா இது அநியாயமா இருக்கே. 10 ரூபாக்கு கொடுப்பா" என்றான் கணேசன்.



"சார் இது எங்களுக்கே 15 ரூபாய்க்கு தான் சார் கிடைக்குது. இதுல நீங்க 10 ரூபாய்க்கு கேட்ட எப்படி சார் கொடுக்கறது" என்று பலூன் வியாபாரி சோகம் நிறைந்த குரலில்  கேட்டான்.

"சரி அப்போ 17 ரூபாய்க்கு கொடு" என்று விடாப்பிடியாய் கேட்டான் கணேசன்.

வேறு வழியின்றி 17 ரூபாய்க்கு ஒத்துக்கொண்டான்.

17ரூபாய் கொடுத்து பலூன் வாங்கி தன் குழந்தையிடம் கொடுத்தான் கணேசன். 

குழந்தை மகிழ்ச்சியில் கத்திக்கொண்டு விளையாடி கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாய் பலூன் உடைந்தது. பலூன் உடைந்தும் குழந்தை அழ ஆரம்பித்தது. 

கணேசன் குழந்தை அழுவதை கண்டு கொள்ளாமல் "ஒழுங்கா ஒரு பொருள கூட வச்சிக்காத.. " என்று குழந்தையை கண்டபடி திட்டினான்.

அதை பார்த்துக்கொண்டிருந்த பலூன் வியாபாரி இன்னொன்று எடுத்து அந்த குழந்தையின் கையில் கொடுக்க முற்பட்ட போது "யோவ்.இன்னொன்னுலாம் வேணாம். கொடுக்காதே " என்று சொல்லி கணேசன் தடுத்தான்.

"இந்த பலூன் உங்க குழந்தையின் சிரிப்புக்காக இனாம் சார்" என்று சொல்லி அந்த குழந்தையின் கையில் பலூனை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்...

அந்த பலூன் வியாபாரியின் சொல் கணேசனுக்கு தலையில் ஓங்கி கொட்டியது போல் இருந்தது. அவமானத்தால் அவன் தலை பூமியை பார்த்தது.


Saturday, 16 July 2016

என் மனைவியாக வந்து விடடி(பாடல் போன்ற கவிதை)

முகத்தை மூடாதடி நீயும் மூடாதடி வீணாய் மூடாதடி
உன் மொத்த அழகையும் கண்கள் காட்டி கொடுத்து விட்டதே  ...!!

பார்க்காதடி என்னை பார்க்காதடி திரும்பி பார்க்காதடி
என் உயிர் மொத்தமும் உன் கண்கள் அள்ளிக்கொண்டு செல்லுதே.

அவளை பின் தொடர வேண்டும் என்றும்
ஒரு போதும் நினைத்ததில்லை நானும்  ..

அவள் பாதம் பட்ட அருகே
என் பாதம் ஓடிச்செல்லுதே
பார்த்துப் பார்த்து செல்லுதே
தேடித்தேடி செல்லுதே...

திடமாய் இருந்த என்னை திரும்பி திரும்பி பார்த்து
திருடனாக ஆக்கி விட்டாயே....

பழகிய வாழ்வு என்று
பார்த்து பார்த்து இருந்தேனே
பரிதாபமாய் பறிகொடுத்தேனே
உன்னிடம் என் வாழ்வை

பரிதாபமாய் பறிகொடுத்தேனே
மையிட்ட கண்களை வைத்துக்கொண்டு
தொலைவிலிருந்து வதைத்தது போதும்....

என் மனைவியாக நீயும் வந்து விடடி....
என் கூடவே இருக்க வந்து விடடி....!!

Wednesday, 6 July 2016

மனைவியின் மேல் காதல் (குறுங்கதை)

சினிமாவிற்கு போக டிக்கட் எடுத்து கொண்டு வந்தான் கணவன்...

வழக்கம் போல மனைவி மேக்கப் போட்டு கலம்ப தாமதமாகியும் கோபப்படமால் அமைதி காத்தான்...

அவளை உட்கார சொல்லிவிட்டு பைக்கை எடுத்து கொண்டு வேகமாக திரையரங்கை நோக்கி சென்று கொண்டிருந்தான்..

அப்போது மழை வர ஆரம்பித்தது...  எங்கே ஒதுங்கறது என்று தேடிக்கொண்டே வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.. மனைவி வேற நனையுறாளே என்று பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவளை பார்த்தான்...

அவள் முகத்தை வானத்தை நோக்கி வைத்து கொண்டு புன்னகையால் மழையை ரசித்துக் கொண்டிருந்தாள்....

அதை கணவன் பார்த்ததும் வண்டியின் வேகம் குறைந்தது .... மனைவியிடம் திரும்பி ஒரு மெல்லிய புன்னகை புரிந்தான்... இருவரும் மழையை ரசித்துக்கொண்டே சினிமாவிற்கு செல்லாமல் ஒரு சின்ன நீண்டதொரு பயணத்தை தொடர்ந்தார்கள்....

Friday, 24 June 2016

அப்பா மார்பு (குறுங்கதை)

எப்பவுமே தன் அப்பா மார்பு மீது படுத்துறங்குவதை வழக்கமாக வச்சிருந்தாள் மகள். மகள் பிறந்து 9-ம் மாதம் தொடங்கி 1.5  வருடம் வரை அப்பாவின் மார்பு தான் அவளுடைய படுக்கையாக இருந்தது.

திடீரென அப்பாவிற்கு வெளிநாட்டு வேலை கிடைத்ததால் மகளை பிரிய முடியாமல் பிரிந்து சென்றார்...

இரண்டு வருடமாய் தொலைபேசியில் கூட அப்பாவிடம் மகள் பேசவில்லை. ஏன் என்று யாருக்கும் காரணம் புரியவில்லை. மகள் பேசாதது நரக வேதனையாக இருந்தது அப்பாவிற்கு.

இரண்டு வருடம் கழித்து வீட்டுக்கு திரும்பிய அப்பாவிற்கு பயம் அதிகமாக இருந்தது எங்கே நம் மகள் என்னை வெறுத்து இருப்பாளோ என்று..

என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் ஒரு வித அச்சத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா.

வீட்டுக்குள் சென்ற போது நள்ளிரவு நேராமானதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள் மகள். அப்பாவின் சட்டையை போட்டு அதன் மீது படுத்து இருந்தாள் மகள்.

அவள் அருகில் போய் படுத்தார் அப்பா.
 
மகள் தானாக  அப்பாவின் மார்பு மீது ஏறி படுத்துக்கொண்டு "வந்துட்டியா பா". என்று கேட்டுக்கொண்டே  அவளுடைய தூக்கத்தை தொடர்ந்தாள்.

அந்த வார்த்தையை கேட்டதும் அப்பாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் துளிகள்  வேகமாக வெளி வந்தது. இரண்டு வருட ஏக்கம் ஒரே நாளில் தீர்ந்தது....

Saturday, 18 June 2016

பெண்கள்(ளே) ஜாக்கிரதை (சிறுகதை)

 பரணியின் வீட்டில் யாரும் இல்லாததால் மகாவை வீட்டிற்கு அழைத்தான். அவளும் அவன் மீது உள்ள காதலால் சரி என்று சம்மதித்து அவனுடன் வீட்டுக்கு சென்றாள்...

பரணி வீடு கோட்டை போல் இருந்ததை பார்த்து பிரம்மித்தாள்.

அவர்கள் வீட்டுக்குள் சென்ற நேரம் பார்த்து பரணியின் தொலைபேசி மணி அடிக்க "நீ வீட்ட சுத்தி பாரு மகா நான் பேசிட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பேசினான்.

"மச்சி மகா வீட்டுக்கு வந்துருக்குடா.. இன்னியோட இவள முடிச்சிட்டு கழட்டி விட்ருவேன்டா.

கொஞ்சம் பயந்த பொண்ணு தான் நடந்தத வெளில சொல்ல பயப்படுவா அது நமக்கு ஒரு அட்வான்டேஜ். எவ்வளவு அலைய விட்டா. நல்லா அனுபவிக்கட்டும்." என்று போனில் அவன் நண்பனிடம் பேசி சிரித்துக்கொண்டிருந்தான் பரணி.

இவனை காணோம் என்று தேடி வந்த மகா பரணி பேசுவதைக் கேட்டுவிட்டாள்.

உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் வாயை மூடிகொண்டு ஓ-வென்று கதறி அழுதாள். என்ன செய்வதென்று யோசித்தாள். 

அவன் வீட்டுக்குள் உள்ளே வந்ததும் புன்னகை புரிந்தாள். அதை பார்த்ததும் "ஆஹா உசார் ஆய்ட்டாடா" என்று கிட்ட நெருங்கி முத்தம் கொடுக்க முயற்சி செய்யும்போது அவள் அவனுடைய மர்ம உறுப்பில் எட்டி உதைத்தாள். 

உதைத்த மறுகனமே அவன் நிலைகுலைந்து கீழே சரிந்தான்.

 கீழே விழுந்து "ஐயோ... ஐயோ.... வலிக்குதே..." என்று கத்தினான். 

இதுதான் தப்பிக்க சரியான சந்தர்ப்பம் என்று கருதி ஓடிப்போய் அவளுடைய பையை எடுத்துக்கொண்டு ஓடி கதவைத் திறக்கும் போது அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் மனசு கேக்காமல் திரும்பி அவனிடம் வந்தாள். 

அவள் கை பையை பக்கத்தில் வைத்துவிட்டு "ஹே சாரிடா சாரிடா.. வலிக்குதா.. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேனு தெரியுமா?" என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை தன் மடிமீது வைத்தாள் ..

"என்னடி இப்படி பண்ணிட்ட ரொம்ப வலிக்க்க்குதுடி" என்று அழுது கொண்டே மெதுவாய் கண்ணை திறந்து அவளை பார்த்து சொன்னான்.

அந்த நேரத்தில் அவள் கை பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரே எடுத்து அவன் கண்ணில் அடித்தாள். 

அடித்துவிட்டு சொன்னாள் "அமைதியான பொண்ணுனா அடங்கி போற பொண்ணு இல்லடா அடக்கிட்டு போற பொண்ணுங்கடா.... நீ அழிக்க நினைக்கறது ஒரு பொண்ணோட கற்ப இல்லடா ஒரு குடும்பத்தோட வாழ்க்கைய. இன்னொரு பொண்ண தொட நினைக்கும்போது இதலாம் உனக்கு ஞாபகம் வரனும் டா".என்று சொல்லிவிட்டு அவளுடைய கை பையை ஸ்டைலாய் மாட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

Friday, 3 June 2016

எடக்கு முடக்கு (குறுங்கதை)

ஒரு காடு பக்கத்துல இருக்குற ஊர்ல எடக்கு முடக்கான பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் எந்த கேள்விய கேட்டாலும் ஏடாகூடமாக தான் பதில் சொல்லுவார்.

அவரிடம் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் "ஐயா சாப்டீங்களா?" என கேட்டார். 

அதற்கு பண்ணையார் "நான் சாப்டுவேன் சாப்ட மாட்டேன். அத கேக்க நீ யாரு?" என்று திமிராய் பதில் சொன்னார்.

இன்னொரு நாள் "ஐயா எங்க வெளில போறீங்களா?" என கேட்டார் வேலையாள். "நான் வெளில போவேன் போ மாட்டேன். அத கேக்க நீ யாரு?" என ஏடாகூடமாய் பதில் சொன்னார்.

இந்த எடக்கு முடக்கான பேச்சு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே சென்றது... அந்த வேலையாளால் இதற்கு எதுவுமே செய்ய முடியவில்லை.
ஒரு காலை வேலையில் பண்ணையார் காட்டை சுற்றி பார்க்கும்போது எதிர்பாராமல் புதைக்குழியில் விழுந்து விட்டார்.

அவர் "காப்பாத்துங்க... காப்பாத்துங்க..." என்று கத்தினார்.

அந்த வழியாய் அவருடைய பணியாள் நடந்து வந்தார்.

அவனை பார்த்து "நல்ல வேல நீ வந்த காப்பாத்துடா காப்பாத்துடா" என கேட்டார்.

அதற்கு அந்த வேலையாள் "நான் காப்பாத்துவேன் காப்பாத்தமாட்டேன். அத கேக்க நீ யாரு ?" என கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்...

Wednesday, 25 May 2016

சந்தோஷம் (குறுங்கதை)

அந்த ரோடு வழியாக போகணும்னு நினச்சாலே மகேசுக்கு எரிச்சல் எரிச்சலா வரும். ஏனா ரோடு ரொம்ப மோசமா குண்டும் குழியுமா இருக்கும்... ஆனா  விதி தினமும் அந்த ரோட கடந்து தான் அவன் போய் ஆகணும்.

வழக்கம் போல அந்த குண்டும் குழியுமுள்ள  ரோட்டில் மகேஷ் திட்டிக்கொண்டே வண்டியை ஓட்டிகொண்டிருந்தான்.

அதே ரோட்டில் ஒருவர் அவரோட மகளை பைக்கில்  கூட்டிக்கொண்டு வந்தார். குண்டும் குழியும் உள்ள ரோட்டால் அப்பாவின் முகம் ஒரே இறுக்கமாய் இருந்தது...!!

ஆனால் அவரோட மகள் மகிழ்ச்சியாய் காணப்பட்டாள்... ஒவ்வொரு முறை பெரிய பள்ளத்தில் வண்டி செல்லும்போது அவள் "டம்ம்ம்மால்" என்று சந்தோஷ கூக்குரல் எழுப்பினாள்.

சின்ன சின்ன பள்ளத்தில் செல்லும்போது "டமாடமாடமாடமால்" என்று கத்திக்கொண்டு இருந்தாள். அவளுடைய ஒவ்வொரு சத்தத்தையும் கேட்க கேட்க அவளுடைய அப்பாவின் முகம் இறுக்கத்திலிருந்து விடுபட்டு சந்தோசமாக மாறியது..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மகேஷின் மனதிற்குள்ளும் ஒரு பெரிய மாற்றம் வந்தது. அந்த பள்ளத்தின் மீதிருந்த வெறுப்பு முழுவதுமாய் மாறி அவனும் அந்த குண்டும் குழியுமுள்ள ரோட்டை புன்னகையோடு ரசிக்க ஆரம்பித்து விட்டான்... 

இப்போது ஒவ்வொரு பள்ளத்திலும் விடும் போது "டமால்" என்று மகேசும் கத்திக்கொண்டிருந்தான்.... மனதிற்குள் மட்டும்....

நீதி : எந்த சூழலிலும் மனதிற்கு சந்தோஷப்பட தெரியும். அதை நாம் தான் புரிந்து வெளிப்படுத்தணும்...

Monday, 23 May 2016

பொன்மொழிகள் (Quotes)

1. உன் புன்னகையை அழியாமல்
பார்த்துக்கொள் அது
உன்னை அழியாமல் பார்த்துக்கொள்ளும்..!

2. பறப்பதற்கு ஆசைப்பட்டால் 
பயத்தை விட்டுதான் ஆகனும்...!!!

3. கடவுள் மீதுள்ள நம்பிக்கை 
உனக்கு நல்லது நடக்கும் வரை தான் நீடிக்கும்.

4 மீண்டும் போராடி பார்க்க ஆசைபட்டால் 
ஒரு புது வழியோடு தான் போகனும்....!!!

5. புதியதாய் முயன்று கொண்டே இரு..
புதியதாய் கற்றுக்கொண்டே இருப்பாய்..!!!

6. மலை ஏற முடிவு எடுத்து விட்டால்
முதல் அடியை யோசிக்காமல் வையுங்கள்.
மீதியுள்ள தொலைவை தானாக கடந்துவிடுவீர்கள்...!!

7. அடுத்தவன்(ள்) என்ன நினைப்பான்(ள்) என்று யோசித்தால் 
உன் அழகிய வாழ்க்கை அடியோடு நாசமாகும்...!!!

8. உனக்கு எதிரி என்று எவருமில்லை.
உன் எதிர்மறை எண்ணங்களே உனக்கு எதிரி....!!!

9. யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதே
உன் வாழ்வினில் ஏமாற்றம் ஒன்று  இருக்காது...!!!

Sunday, 22 May 2016

அவளை தேடுகிறேன்...!!(கவிதை)


அவளை நானும் தேடுகிறேன்.
அழகியை நானும் தேடுகிறேன்.
கண் முன்னே இருந்தவளை திடீரென தொலைத்தேனே..!!
கண்கட்டி வித்தை போல பார்க்கும்போதே தொலைந்தாளே...!!

அவள் கூந்தல் ஓரத்தில் ஒட்டிகொண்டிருக்கும் பூப்போல ஆனேனே
ஒரு முறை என்னை பார்ப்பாளா என்று ஏங்கினேனே

அவள் விழியில் கோலமிட மை உதவியதே
அவள் வாழ்வினில் கோலமிட என் கை உதவுமே

அதை நானும் தெரிவிக்க துடிக்கிறேனே
அவள் மறுத்து விடுவாளோ என்று தயங்கினேனே..!!

சின்னஞ்சிரு பட்டாம்பூச்சியும் அவளிடம் வந்து பேசுதே.
அதைக் கண்டு என் மனமும் ஏங்கித் தவிக்குதே.

உனக்கு என்று காத்துக்கொண்டிருக்குதே நானும் என் மனமும்....
சீக்கிரம் வந்து என்னிடம் சேர்வாயோ...!!!

அழகென்ற திமிரே வேணாம்
உன் அழகை முறியடிக்க நம் குழந்தை இருக்கு..
அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளடி...!!!.

Friday, 13 May 2016

ஓட்டு போடு (சிறுகதை)

திங்கள் கிழமை எலெக்சன் வேற வருது. தேர்தலில் ஓட்டு போட போறோன்னு சாக்கு சொல்லி சனிக்கிழமையும் திங்கள்கிழமையும் லீவு கேட்கலாமா என்று யோசித்தான் மனோகர். அப்போதுதான் அவன் நினைவுக்கு வந்தது. மனோகரின்  மேனேஜர் சரியான சிடு மூஞ்சி . எப்ப பாரு எரிஞ்சி விழுந்துட்டே இருப்பான்.. அவனுடைய தங்கை கல்யாணத்துக்கே ஒரு நாள்தான் லீவு கொடுத்தான்.  செவ்வாய்கிழமை கிளையன்ட் விசிட் வேற இருக்கு. இவன் சத்தியமா லீவு கொடுக்க மாட்டான் என்று முடிவு செய்து விட்டான்.

ஊருக்கு போறதுக்கு எஙகேயும் டிக்கெட் வேற கிடைக்காது என்ன பண்றதுன்னு  யோசிச்சுட்டே இருந்தான் மனோகர்...

எல்லாரும் ஆபீஸ்ல இருந்து கலம்பியாச்சு இவன் மட்டும் உட்கார்ந்து இருப்பதை பார்த்து மேனேஜர் அவன் கிட்ட வந்தார்.

"ஏன் இன்னும் இங்க இருக்க. ஊருக்கு போகலையா" என்று கேட்டார்.

மனோகர் பெருமையுடன் "இல்ல சார். செவ்வாய் கிழமை நமக்கு க்ளையன்ட் விசிட் இருக்குல. அதனால போக வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். அது மட்டும் இல்ல நான் ஒரு ஓட்டு போடாததால பெரிசா ஒன்னும் நடக்க போறது இல்ல" என்று சொன்னான். 

இப்படி பேசினால் மேனேஜர் பாரட்டுவார்னு எதிர் பார்த்தான். ஆனால் நடந்ததோ வேறு..

மேனேஜர் கோபத்துடன் "என்னையா லூசு போல பேசுற... படிச்ச நம்மலே இப்படி பண்ணா எப்படி. நான் போய் ஒரு வோட்டு போடாததால ஒன்னும் ஆகாதுன்னு சொல்றியே. உன்னலாம் என்ன சொல்றதுனே தெரியல. நீ போடுற ஒரு ஓட்டு ஒரு வேட்பாளர அங்கீகரிக்குது, எப்படினா நீ நல்லவன்.. இந்த நாட்டுக்கு நீ நல்லது செய்வேன்னு நான் நம்புறேன்னு . அது புரியாம இப்படி உலர்னு இருக்க".

அவர் இப்படி பேசுவார்னு அவன் எதிர் பார்க்கவில்லை. கொஞ்சம் ஆடிப்போய் விட்டான்.
"இல்ல சார் அது வந்து, இப்போ எங்கேயும் டிக்கட்  வேற கிடைக்காது." என்று மழுப்பினான் மனோகர்.

"உனக்கு என்ன இப்ப ஊருக்கு போறதுக்கு டிக்கெட் தானே வேணும். கொஞ்சம் பொறு"ன்னு சொல்லிட்டு சில ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணார். அதில் ஒரு ட்ராவல்ஸ்ஸில டிக்கெட் இருந்தது உடனே அதை புக் பண்ணி விட்டு டிக்கெட்டை மெயில் அனுப்ப சொன்னார். அந்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டுவந்து மனோகரிடம் நீட்டினார்.

"இந்தா டிக்கெட் நீ போய் ஓட்டு போடு. ஓட்டு போட்டு முடிச்சதும் க்ளையன்ட் விசிட்டுக்கு வர முடியுமானு பாரு. வர முடியுலனா ஒன்னும் ப்ராப்ளம் இல்ல நான் பார்த்துக்குறேன்."  என்று டிக்கெட்டை கொடுத்து விட்டு வீட்டுக்கு கலம்பினார்.

அவன் ஆச்சரியத்தில் கண்கள் விலகாமல் அவர் நடந்து போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். தன்னை நினைத்து வெட்கப்பட்டான்... அதே நேரத்தில் தன் மேனேஜரை நினைத்து பெருமைபட்டான்.

Friday, 6 May 2016

பொம்மை (குறுங்கதை)

தன் மகள் நிலாவை கூட்டிக்கொண்டு பொம்மைகள் விற்கும் கடைக்கு சென்றார் அப்பா. கடை வாசலில் அழுக்கான உடை அணிந்து ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள்.



அந்த சிறுமி "சார்" என்று சொல்லி கை நீட்ட அவளுக்கு அப்பா 2 ரூபாய் போட்டு பெருமையாய் கடைக்குள் சென்றார்.

உள்ளே சென்றதும் நிலா எல்லா பொம்மையையும் சுற்றி பார்த்துவிட்டு அந்த பொம்மை வேணும் என்று கை நீட்டினாள். அந்த பொம்மை கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தது. இருந்தாலும் அப்பா அதை தன் மகளுக்காக வாங்கி கொடுக்க முற்பட்ட போது எனக்கு இரண்டு பொம்மை வேணும் என்று சொன்னாள் நிலா.

"ஏன்" என்று கேட்க பதில் சொல்லாமல் வேணும் என்று சொல்லி அடம்பிடித்தாள். அவளை சமாதானப் படுத்த முயன்று தோற்று கோபத்தோடும் எரிச்சலோடும் இரண்டும் வாங்கி கொடுத்தார்.

அந்த இரண்டு பொம்மைகளையும் வாங்கி கொண்டு வெளியே ஓடினாள் நிலா. "ஏய் எங்க ஓடுற?" என்று அப்பா கத்தியதை காதில் கொஞ்சம் கூட வாங்காமல் வெளியே ஓடி வந்தாள். அப்பா அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தார்.

அங்கே நின்ற சிறுமி முன்னாடி போய் நின்று கையில் இருந்த இரு பொம்மையில் ஒரு பொம்மையை நீட்டி "இந்தா வாங்கிக்க. இந்த பொம்மை உனக்கு இந்த பொம்மை எனக்கு" என்று சொன்னாள் மகள்.

"இந்த பொம்மை எனக்கா" என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில் கேட்டாள்.
"ஆமா" என்று சொன்னாள் நிலா.

பொம்மையை வாங்கிகொண்டு முகத்தில் மகிழ்ச்சி பொங்க அவளுடைய அம்மாவை நோக்கி ஓடினாள் சிறுமி.

இதை பார்த்துக்கொண்டிருந்த அப்பா தன்னை நினைத்து வெட்கப்பட்டார். அதே நேரத்தில் தன் மகளை தட்டிக்கொடுத்து பாராட்டி அவளை நினைத்து பெருமைப்பட்டார்.

நீதி: பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொருவரின் மனதளவுக்கு தான் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்.

Monday, 2 May 2016

பயன் (குறுங்கதை)

கதிர் வீட்டில் உள்ள நாற்காலியின் ஒரு கால் முற்றிலும் சேதமடைந்து விட்டது. 

இனிமேல் இது பயன்படாது என்று குப்பையில் வீசினான்.

அந்த உடைந்த நாற்காலியை ஒருவர் கண்டெடுத்து அதை தன் வீட்டிற்கு கொண்டு போனார்.

அந்த நாற்காலியின் இன்னொரு காலையும் உடைத்து, அதை உடைந்த இரு காலுக்கும் நடுவில் பொருத்தினார். இப்போது நாற்காலி முக்காலியாய் மாறியது.

அந்த முக்காலி மேல் கம்பீரமாய் கால்மீது போட்டு உட்கார்ந்தார்.

நீதி: பயன்படாதது என்று எதுவுமில்லை பயன்படுத்த தெரியாதவர் தான் உள்ளனர்.

Wednesday, 27 April 2016

நம்பிக்கை (சிறுகதை)

தொழிலில் பெரியதாய் நஷ்டம் வந்தது பாண்டியனுக்கு..

சோகமே அவன் வாழ்க்கையாய் ஆனதால் மிகுந்த விரக்தியோடு இருந்தான்....

எங்கே போறதுனே தெரியாமல் தெரு தெருவாய் திரிந்தான்..

அப்போது எதிரில் அவனுடைய பள்ளி ஆசிரியர் வந்தார்.. பாண்டியனை பார்த்ததும் அவரும் இவனை எளிதாய் அடையாளம் கண்டுகொண்டார்....

பாண்டியனை பார்த்ததும் இவன் ஏதோ சோகமாய்  இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டார் ஆசிரியர்.

"என்ன ஆச்சு பா ஏன் இவ்வளவு சோகமா இருக்க?" என்று கேட்டார் ஆசிரியர்.

"இல்ல சார் தொழில்ல எல்லாமே நஷ்டமாயிடிச்சு சார். இப்ப என் கிட்ட எதுவுமே இல்ல சார். எங்க போறதுன்னு தெரில என்ன பன்றதுனும் புரியல " என்று வருத்ததோடு புலம்பிக்கொண்டிருந்தான் பாண்டியன்.

அவன் சொன்னதை பொறுமையாய் கேட்டுக்கொண்டு அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார்.

அறைந்ததும் அவன் கண்ணிலிருந்து லேசான  கண்ணீர் தானாய் வெளிவந்தது அதை துடைத்துக்கொண்டே "என்ன சார் அடிச்சிட்டீங்க?" என்று பதறியபடி கேட்டான்.

"உன் கிட்ட எதுவுமே இல்லன்னு சொன்ன?".

"அடி வாங்கனுதும் அழறதுக்கு உன் கண்ணு இருக்கு அத உடனே  துடைக்க உன் கை இருக்கு. அப்புறம் வேற என்ன வேணும் உனக்கு.
காலு இல்லாதவன் நடக்கனும்னு நினைச்சா எவ்வளவு தூரம் வேணாலும் நடக்கலாம்..  ஆனா காலு இருந்தும் நம்பிக்கை இல்லேன்னா அவனால  ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. போடா  போய் நம்பிக்கையோடு நட. இப்படி நடுதெருவில நடக்காத" என்று அவன் மண்டையில் உரைக்கும் படி சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ஆசிரியர்...

அதை கேட்ட பிறகு தான் தெளிவு பிறந்தது அவனுக்கு.

வாத்தியார் அடித்தது அவன் கன்னத்தில் வலிக்கவில்லை இப்போது இதயத்தில் வலித்துக்கொண்டிருந்தது.

நம்பிக்கையோடு நடை போட ஆரம்பித்தான். 

Thursday, 21 April 2016

இதுதான் உலகம்....



நீ நல்லவனா இருந்தனா
கெட்டவனு சொல்லும்
கெட்டவனா இருந்தனா
நல்லவன்னு சொல்லும்

உன்ன விட சுமாரா வேலை
செய்றவனுக்கு தான்
எல்லாம் கொடுக்கும் ...!!

நீ விழுந்து கிடக்கும் போது
உனக்கு உதவாது
நீ முன்னேறும் போது
வயித்தெரிச்சல் படாம இருக்காது

எவனுக்கு காசு தேவை பட்டாலும்
உன்னை தான் கூப்டுவான்
உனக்கு காசு தேவை பட்டா
ஒருத்தனும் இருக்க மாட்டான்...!!!

Tuesday, 19 April 2016

குட்டிக் கருத்து

வாழ்க்கை

கூட்டமா ஒரு பஸ் போகுதுனா பின்னாடியே
ஒரு பஸ் காலியா வரும்னு அர்த்தம்
அதே போல தான் நம் வாழ்க்கைல வர வாய்ப்பும்...!!!


நியூட்டனின் மூன்றாம் விதி..
குழந்தையையும் மனைவியையும்
திட்டி விட்டு ஆபிசுக்கு சென்றான்
அங்கே மேனேஜர் அவனை திட்டினார்..

நட்பின்அழகு..!!

போனில் ரமேஷ் "என்னடா வேணும்"
ராகேஷ் "உன் அன்பு டா "
ரமேஷ் "காசு எவ்வளோ டா வேணும்"...!!!
ராகேஷ் "1000"
ரமேஷ் "அனுப்புறேன்"

கோபம் ஆகாது...!!

"அவர்களை அடிச்சிட்டு வந்து என்ன அடி"
 என்று இரண்டு குண்டர்களிடம்
மாட்டிவிட்டு பையன்
வீட்டுக்கு சென்று விட்டான்.


Sunday, 17 April 2016

கோபம் (குறுங்கதை)

அப்பா வீட்டுக்குள் நுழையும் போது பையன் WWE பார்த்துக்கொண்டிருந்தான்.

அதை பார்த்ததும் அப்பாவுக்கு கோபம் வந்தது.

வேகமாய் போய் பையனை ஓங்கி அறைந்தார் "எத்தன தடவ சொல்றது படிக்கிற நேரத்துல டிவி பாக்காதன்னு".

அடித்ததும் பையன் வலி தாங்காமல் அழுதான்.

அழுது கொண்டே சொன்னான் "சின்ன பையன் கிட்ட போய் வீரத்த காட்டுறீங்க. அதோ டிவி-ல தெரியுற ஆளுங்க கிட்ட சண்டை போட்டு வீரத்த காட்டுங்கன்னு".

இந்த பதிலை கேட்டதும் மெதுவாய் டிவியை திரும்பி பார்த்தார்.

டிவியில் bulk -ஆன மனிதர்கள் சண்டை போட்டதை பார்த்ததும் "இவனுங்க கிட்ட போய் சண்ட போடணுமா... இவனுங்க என்ன அசால்டா முறிச்சி போட்டுடுவான்களே"என்று அப்பா மனசுக்குள்ளே நினைத்துக்கொண்டே அந்த டிவியை ஒரு பயத்துடனே பார்த்தார்...!!!