Thursday, 24 March 2016

நாட்டுக்காக நாலு நல்ல வார்த்தைகள் (சும்மா ஒரு தத்துவம்)


ட்ராபிக் ரூல்ஸ மதி...!!

1. வண்டில மெல்லமா போனா நீ கெத்து
     வேகமா போனனா போய்டுவ செத்து.

2. சிக்னல்ல ரெஸ்ட் எடுக்குற போல நில்லு
ரேசுக்கு போற போல நிக்காத.

3. வண்டிய பார்த்து பதமா ஓட்டு
எல்லாரையும் பயமுறுத்துற போல ஓட்டாதே .

4. சீக்கா (Sick) போறதுக்கு பதிலா
கார்ல இருக்குற
சீட்டு பெல்ட் போட்டு போலாம்.

வோட்டு போட்டு பேசு...!!!

1. லஞ்சத்த ஊழல ஒழிக்கணும்னு ஆசைபட்டா
முதல்ல தேர்தல் நேரத்தில ஓட்டு போடு.

2. ஓட்டு போட்டா ஒழிஞ்சிடுமானு கேக்காத.
   அத நீ ஓட்டு போடுற ஆள  பொறுத்து இருக்கு.

3. ஊழல் கட்சின்னு தெரிஞ்சும் அவர்களுக்கு ஓட்டு போடுறத விட்டுட்டு
புதிய ஆளுங்கள தேர்ந்தெடுத்து ஓட்டு போடு.

4. புதுசா வந்தா ஊழல் பண்ண மாட்டாங்களா லஞ்சம் வாங்க மாட்டாங்களான்னு நீ கேப்ப அதற்கான பதில் இங்கே புதுசா ஒருத்தர் வந்தாங்கனா ஊழலும் லஞ்சமும் குறையும். எப்படினா புதுசா வந்ததும் எல்லாத்தையும் தெரிஞ்சிக்க சில வருடங்கள் ஆகும். அதற்குள்ள அடுத்த தேர்தல் வந்துடும்.

தேசபக்திய இப்படி காட்டு...!!!


கிரிக்கெட்ல ஜெயிக்கும் போது நீ சந்தோசபட்டா மட்டும் உனக்கு தேசபற்று இருக்கும்னு அர்த்தம் இல்ல.
1. ரோட்ல குப்பை போடாத போதும் எச்சில் துப்பாத போதும்.
2. சிக்னல்ல நிற்கும்போது
3. தேர்தல்ல வோட்டு போடும்போது.
4. உன் வேல சீக்கிரம் முடியும்னு லஞ்சம் கொடுக்காம இருக்கும் போதும்.
5. லைன்ல ஒழுங்கா நிற்கும்போதும்.

உன் தேசபக்தி அழகா தெரியும்....


Tuesday, 22 March 2016

அப்பா (சிறுகதை)

"அப்பா கிட்ட நம்ம காதல பத்தி பேசிட்டேன் டா என் வீட்டு பக்கத்துல இருக்குற பார்க்குக்கு வரியா அங்க உன் கிட்ட கொஞ்சம் பேசணும். வரும் போது மறக்காம உன் உயிர் நண்பன்னு ஒருத்தன பத்தி அடிக்கடி சொல்லுவியே அவனையும் கூட்டிட்டு வா டா".. என்று தியாகுவிடம் போனில் சொன்னாள் உமா.

"எதுக்கு டி அவன்" என்று கேட்டான் தியாகு .


"நீ கூட்டிட்டு வாயேன் நான் சொல்றேன் "என்றாள் உமா.

தியாகு தன நண்பன் வேலவனை கூட்டிடுக்கொண்டு பார்க்குக்கு விரைந்தான்...

அவர்களுக்காக பார்க்கில் உமா காத்துக்கொண்டிருந்தாள்.

"சரி டி இப்ப சொல்லு உங்க அப்பா என்ன சொன்னாரு?. சம்மதிச்சிட்டாரா?. என்னை பார்க்கனும்னு சொன்னாரா?" என்று கேள்விக்களை அடுக்கினான்.

லேசா விழுங்கி கொண்டு பேசினாள் "இல்ல டா.. அது வந்து அவரு உன் நண்பன பார்க்கனும்னு சொன்னாரு" என்றாள் உமா.

ஆச்சரியத்தில் இருவரின் (வேலவன் மற்றும் தியாகு ) விழிகளும் பெரியாதாயின.

"என்னடி சொல்ற என்னை பார்க்குறதுல ஒரு அர்த்தம் இருக்கு. இவன எதுக்கு பார்க்கனும்னு சொல்றாரு" என்று புரியாமல்கேட்டான்...

"எனக்கு என்ன தெரியும். உன் நண்பன பார்க்கனுமா அவன் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாரு. சரியான லூசா இருப்பாருன்னு நினைக்குறேனு" என்று தன் அப்பாவை திட்டிக்கொண்டே சொன்னாள்.

"இப்போ அவரு உன் நண்பனுக்காக தான் வீட்ல காத்துக்கொண்டிருக்கார்னு" சொன்னாள்.

"சரி மச்சி... நீ போய் பேசிட்டு வாடா" என்றான் தியாகு.

"நீ அவர் கிட்ட பேச போகும்போது போன் பண்ணி உன் பாக்கெட்ல வச்சிக்கோ மச்சி. நாங்க ரெண்டு பெரும் இங்கிருந்தே கேக்குறோம்" என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

வேலவனும் "என்னடா இது காமிடியா இருக்கு" என்று சிரித்தான்.
"சரி போய் பேசிட்டு வரேன்" என்று லேசாய் திமிராய் சொல்லி உமாவுடைய வீட்டுக்கு விரைந்தான்.

உமா வீட்டுக்கு போய் காலிங் பெல்லை அழுத்தினான். உமாவுடைய அப்பா கதவை திறந்தார்.

நான் தான் தியாகுவின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

வேலவனை வீட்டுக்குள் அழைத்து காபி கொடுத்து உபசரித்தார் உமாவின் அப்பா. வேலவன் வீட்டுக்குள் நுழையும் போதே தியாகுவிற்கு போன் பண்ணி விட்டான்.

சிறிது நேரத்திற்கு பிறகு பேச்சை தொடர்ந்தார் உமா அப்பா.

பார்க்கிலிருந்து தியாகுவும் உமாவும் ஹெட்செட்டில் இவர்கள் என்ன பேசிக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனித்தார்கள்.

வேலவனை பற்றி சிறிது பேசிவிட்டு " உங்கள் நண்பரை பற்றி சொல்லுங்களேன்" என்று சொன்னார் உமா அப்பா.

"நாங்க ரெண்டு பெரும் சின்ன வயசுலருந்து ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஒண்ணா தான் படிச்சோம் சார்.

என் நண்பன் ரொம்ப அறிவாளிங்க. ரொம்ப நல்லா படிப்பான்.

ஸ்கூல்ல இருந்து காலேஜ் எல்லாத்துலையும் அவன்தான் ஃபர்ஸ்ட் . கோல்ட் மெடல்லாம் வாங்கி இருக்கான்.

எங்க கேங்குலையே அவன்தான் ஸ்மார்ட் வேற. அவனிடம் நிறைய திறமைகள் வேற இருக்கு சார்"...

அப்படி இப்படி என்று தன் நண்பனை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தான் வேலவன்.

எல்லாத்தையும் பொறுமையாய் கேட்டு கொண்டிருந்தார் அப்பா.

"நல்லது தம்பி. உங்க வீட்ட பத்தி சொல்லுங்க" என்றார் அப்பா.

"அப்பா பேங்க்ல கிளெர்க்கா வேலை செய்றாரு அம்மா வீட்ல எங்கள பார்த்துக்குறாங்க". என்றான்..

"எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவ இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐ.டி கம்பனில இப்பதான் வேலைக்கு சேர்ந்திருக்கா" என்றான் வேலவன்..

"நானும் என் தங்கச்சியும் ரெண்டு பெரும் ரொம்ப திக் பிரிண்டுங்க சார். எதுவுமே மறைச்சிக்க மாட்டோம்" என்று தங்கச்சியை பற்றி புகழ்ந்தான்.

"நல்லது பா .. நீ உன் தங்கச்சிய உன் நண்பனுக்கு கட்டி கொடுப்பியா? என்று கேட்டார் அப்பா.

அந்த கேள்விய கேட்L தும் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டான் வேலவன்.. போனில் கேட்டுக்கொண்டிருந்த உமாவும் தியாகுவுமும் தான்.

வேலவன் மௌனமாய் இருந்தான்.

"சொல்லுங்க தம்பி" என்று மறுபடியும் கேட்டார்.

"இல்லங்க அது வந்து" என்று இழுத்தான்.

"தம்பி நான் அப்படி கேட்டதுக்காக மன்னிச்சிக்கோங்க. நான் அந்த கேள்வி கேட்டதும் உங்க மனசுக்குள்ளே உங்கடைய நண்பனை பற்றி சில எதிர்மறையான எண்ணம் தோன்றியதை கவனிச்சேன். உன் நண்பனிடம் சின்ன சின்ன குறை இருக்குனு உங்க மௌனமே காட்டிக்கொடுத்திடிச்சி. நீங்க நல்ல நண்பனா இருந்திருந்தீங்கனா இந்நேரம் அந்த சின்ன சின்ன குறைகளெல்லாம் உன் நண்பனிடம் சொல்லி அத தீர்த்திருப்பீங்க. இவ்வளவு நாள் உங்களுக்குள்ளே புதைச்சி வச்சிருக்கீங்களே தம்பி. இது உங்க நண்பனுக்கு செய்ற பெரிய துரோகம் பா" என்றார்.

மேலும் தொடர்ந்தார் அப்பா "இப்ப கூட பிரச்சனை இல்ல தம்பி போன்ல இருக்குற உன் நண்பன் கிட்ட நீங்க என்னலாம் அவன்கிட்ட என்ன மாத்தணும்னு நெனைக்குரீங்கலோ அத சொல்லி சரி செய்யுங்க அதான் நல்ல நண்பனுக்கு அழகு தம்பி. உன் நண்பன் மாறிட்டான்னு நீங்க சொல்லுங்க தம்பி அடுத்த தேதிலயே கல்யாணத்த வச்சிக்கலாம்" என்று சொல்லி அவனை வழி அனுப்பி வைத்தார்.  வேலவன் ஒரு குற்ற உணர்ச்சியோடு அங்கிருந்து விடை பெற்றான்.

வேலவன் திரும்பி பார்க்குக்கு வந்து தியாகுவிடம் "மன்னிச்சிக்கோ மச்சி இத்தன நாள் சில விசயத்த உன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன் டா. உமா அப்பா சொல்லும்போது தான் நான் எவ்வளோ கேவலமா இருந்திருக்கேன்னு இப்பதான் எனக்கே புரிஞ்சுது மச்சி" என்று சொல்லும்போது லேசான கண்ணீர்த்துளி வேலவன் விழிகளில் எட்டிப்பார்த்தது.. 

அப்புறம் தியாகுவின் தப்பையும் அவன் மாற்ற வேண்டிய செயல்களை பற்றியும் எடுத்து சொன்னான் வேலவன்.

அதை கேட்டு முடித்ததும் "உனக்கு மட்டுமில்ல மச்சி எனக்கும் இப்பதான் நான் சில விசயத்த மாத்தனும்னு எனக்கே புரிஞ்சுது. எல்லாத்துலயும் பெஸ்டா இருந்தேன்னு லேசா கர்வம் இருந்திச்சி ஆனா சில விசயத்துல இவ்வளவு கேவலமா இருந்திருக்கேன்னு நினைக்கும்போது வருத்தமா இருக்கு" என்று தன் தவறை உணர்ந்து பேசினான். 

உமா தன் தந்தையை தப்பா நினைச்சிட்டோமே என்று வருந்தினாள் அதே நேரத்தில் அப்பாவின் புத்திசாலிதனத்தை நினைத்து பெருமை அடைந்தாள்.


Wednesday, 16 March 2016

அழகிய வேண்டுதல் (சிறுகதை)


"டேய் ஜோசப்  எங்கடா இருக்க. தலைவர் படத்துக்கு டிக்கெட் கடைச்சிடிச்சி. இன்னும் 15 நிமிஷத்துல தலைவர் படம் போட்டுடவானுக சீக்கிரம் வந்து தொலைடா.." என்று நண்பர்கள் மொபைலில் கத்திக்கொண்டிருந்தார்கள்.

"ஹே கலக்கல் மச்சி... தோ தோ வந்துட்டேன் டா... இன்னும் 10 நிமிசத்துல வந்துடுவேன்" என்று சந்தோசம் பொங்க சொல்லிவிட்டு  பைக் எடுத்துக்கொண்டு வேகமாய் கலம்பினான்...


"அண்ணா லிப்ட்னா அண்ணா லிப்ட்னா" என்று கை காட்டி வரும் எல்லாம் பைக்கிடமும் மணியும் முத்து என்ற இரு சிறுவர்கள்  கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

(மணிக்கு 4வயதும் முத்துவுக்கு 6 வயதும் ஆகின்றது. அவர்கள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு போக லிப்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.)

இதை அந்த வழியாக வந்த ஜோசப் பார்த்தான்.

அவனிடமும் அந்த சிறுவர்கள் லிப்டு கேட்டார்கள்.

ஏதோ ஒரு நினைப்பில் வண்டிய நிறுத்தி விட்டான்.

"அண்ணே அந்த சிக்னல் முனைல இறக்கி விட்டுடுறீங்களா?" என்று முத்து கேட்டான்.

ஜோசப் அவசரமாய்  போகமாய் வேண்டும். இன்னும் 10 நிமிசத்துல தலைவர் படம். இருந்தாலும் "போற வழிதானே இறக்கி விட்டுடுவோம்" என்று நினைத்து அவனும் அவர்களுக்கு லிப்டு கொடுக்க சம்மதித்தான்.

அந்த இரண்டு  சிறுவர்களும் உடனே பைக்கில சந்தோசத்தோடு ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். மணி முன்னாடியும் முத்து கடைசிலயும் உட்கார்ந்துகொண்டனர்...

பைக் அங்கிருந்து புறப்பட்டது.

அந்த சிக்னலை அடைய சில நிமிடம் இருக்கும்போது தான் முத்துவுக்கு தோன்றியது "அண்ணா நீங்க எந்த பக்கம் போறீங்க" என்று கேட்டான்.

ஜோசப் "வலது புறம்" என்றான்.

"அண்ணா நாங்களும் அந்த பக்கமாதான் போறோம்" என்றான்.

ஜோசப் சிரித்துக்கொண்டே "சரி போகலாம்" என்றான்.

"பார்த்தியாடா அம்மா சொன்ன போலவே நடக்குது" என்று சந்தோஷத்தோடு சொன்னான் முத்து.

"என்னடா அண்ணா சொன்னாங்க" என்று மணி கேட்டான்.

"அதாண்டா கடவுள் நமக்கு உதவி செய்யணும்னு நெனைச்சா சரியான ஆள காட்டுவாருனு. அந்த ஆள் இவர்தான் டா. பார்த்தியா நாம போற வழியிலேயே அவரும் வரார்". என்று முத்து சொன்னான்.

"ஆமாம்ல" என்று சொல்லிக்கொண்டே மணி வாயை பிளந்தான்.

"பிரேயர் பண்ணா  இன்னும் நல்லது நடக்கும்னு சொன்னாங்களே டா. ஞாபகம் இருக்கா" என்று முத்து மணியிடம் கேட்டான்.

"இருக்கு டா அண்ணா" என்றான்.

"சரி இவர் நம்ம தெருவரை போகனும்னு பிரேயர் பண்ணலாமா"  என்றான் முத்து.

"சரி சரி பண்ணுவோம்டா" என்று மணி சொன்னான்.

இருவரும் கை கூப்பி பிரார்த்தனை பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

"சாமி சாமி இவர் எங்க வீட்டு வரை போகனும் அதற்கு நீ தான் உதவி செய்யனும். ஏன்னா பஸ்ஸுலாம் ஒரே கூட்டமாய் போகுது. அதில் ஏற கூட முடியல. அதுக்குதான் வேண்டுறோம்" என்று  லேசாய் முனுமுனுத்துக்கொண்டே முத்து வேண்டினான்.

அதற்க்கு முன்னாடி உட்கார்ந்து கொண்டிருந்த மணி "ஆமாம் சாமி.. ஆமாம் சாமி" என்று முத்துவின் பிரார்த்தனைக்கு உதவி புரிந்து கொண்டிருந்தான்..

ஜோசப்பின் மனம் மாறிக்கொண்டிருந்தது. நண்பர்களிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. ஆனால் ஜோசப்புக்கு அதை எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த சிறுவர்களின் செயல்களை காதில் கேட்டபடி ரசித்துக்கொண்டிருந்தான். அவனுடைய சிறு வயது ஞாபகம் அனைத்தும் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அந்த இரண்டு பேரும் எந்த இடத்திற்கு போக வேண்டுமென்பதை அவர்கள் பேசிய பேச்சில் இருந்து  கணித்துவிட்டான் ஜோசப்.

ஜோசப் இடது பக்கமாய் திரும்பியதும் தியேட்டர் உள்ளது. என்ன செய்வதென்று யோசித்தான். இந்த பசங்களையும் அவனுக்கு ஏமாத்த மனசு வரல.

ரொம்ப யோசனைக்கு பிறகு ஜோசப் அந்த வேண்டுதலை கேட்டும் கேட்காதது போல " தம்பி டேய் நான் ரைட்ல போ போறேன் நீங்க இறங்க போறீங்களா வறீங்களா" என்றான்.

"நாங்களும் அந்த வழியா தானா போறோம்" என்று சந்தோஷத்தோடு சொன்னான் முத்து. மணியும் முத்துவும் ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியோடு தலையாட்டிக்கொண்டார்கள்.

அவர்களுடைய இடம் வந்ததும் "அண்ணே இங்க தானே இறங்கனும் நிறுத்துங்கனே" என்று சொல்லி வண்டியை நிறுத்தி இறங்கி விட்டு சந்தோஷ கூக்குரல் எழுப்பினார்கள். "ஹே பார்த்தியா டா அம்மா சொன்ன போலவே நடந்திச்சி. கடவுள் நமக்கு உதவி செஞ்சார் பார்த்தல." என்று முத்து கத்தினான்.

"ஆமாம் டா அண்ணா...  வா இத ஓடிப் போய் அம்மா கிட்ட சொல்லலாம்.. நான்தான் முதல்ல சொல்லுவேன்." என்று சொன்னான் மணி.

"இல்ல நான் தான் சொல்லுவேன்" என்று முத்து சொன்னான்.

இருவரும் அப்படியே கத்திக்கொண்டே வீட்டை நோக்கி ஒடினார்கள்.

அவர்கள் அளவுக்கு அதிகமாய் சந்தோஷத்தில் இருந்ததால் அந்த இரண்டு சிறுவர்களுக்கும் ஜோசப்புக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லத் தோணவில்லை..

அவனும் அதை எதிர் பார்ப்பதைப்போல் தெரியவில்லை.

அவர்கள் ஓடும் அழகை கொஞ்சம் நேரம் ரசித்து விட்டு அழகிய நினைவுகளோடும் மெல்லிய புன்னகையோடு அங்கிருந்து கலம்பினான்... 

Wednesday, 2 March 2016

காதல் (கொன்று) விடு (சிறுகதை)


"நேரமாயிடிச்சி டி நான் வீட்டுக்கு கலம்புறேன். " என்று சொல்லிவிட்டு வேகமாய் வீட்டுக்கு கலம்பி கொண்டிருந்தாள் நித்யா.


"என்னடி ஒரு நாள் நம்ம  டீம் கூட டின்னர் சாப்டு போக கூடாதா?" என்று இடை மறித்தாள்  தோழி.

"இல்லடி அப்பா எனக்காக சாப்டாம இருப்பார். நாங்க ரெண்டு பெரும் எப்பவுமே ஒண்ணா உட்கார்ந்து தான் சாப்டுவோம். அது எங்க ரெண்டு பேருக்குமே பழகிடிச்சி." என்று சொன்னாள் நித்யா.

அப்போ அவளுக்கு வாட்சப் மணி அடித்தது.

"பாருடி இந்த மெசேஜ் கூட என் அப்பா கிட்ட இருந்து தான் வந்திருக்கும்" என்று சொன்னாள் நித்யா.

நித்யா சொல்லி வைத்தது மாதிரி அப்பாவின் மெசேஜ் தான் "அம்மாடி ஆபிஸ்ல இருந்து கலம்பிட்டியா?" என்று வாய்ஸ் மெசேஜ் கேட்டது.

"கலம்பிட்டேன் பா" என்று நித்யாவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள்.

"சொன்னேன்ல... பார்த்தியா. சரி நான் கலம்புறேன். நீங்க என்ஜாய் பண்ணுங்க." என்று சொல்லிவிட்டு விர்ரென்று வீட்டுக்கு கலம்பினாள் நித்யா.

நித்யாவின் அம்மா நித்யாவுடைய சிறு வயதிலேயே நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார்கள். ஆனால் அந்த குறை சிறிதும் தெரியாமல் வளர்த்தார் நித்யாவோட அப்பா பாலகுமார். நித்யாவுடைய அப்பாவுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நித்யா தான் அவருக்கு டச் போன் வாங்கி கொடுத்து அதில் வாட்சப் இன்ஸ்டால் செய்து அதில் எப்படி வாய்ஸ் மெசேஜ் அனுப்பனும் என்று மட்டும் சொல்லி கொடுத்திருந்தாள். அதனால் எப்பவும் நித்யாவும் அவளுடைய அப்பாவும் வாய்ஸ் மெசேஜ் தான் அனுப்பிப்பார்கள்.

நித்யாவுடைய டீமுக்கு புதியதாய் ஒரு டீம் லீட் சேர்ந்தான். அவனுடைய அழகும், பேச்சும், திறமையும் இவளை பெரியதாய் கவர்ந்தது. அவனுக்கும் இவள் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தததால் இவர்கள் இருவரும் சீக்கிரமே காதலில் விழுந்தார்கள்.

அவனுக்காக ஆபிசிலேயே அதிக நேரம் உட்கார்ந்து செலவழிக்க தொடங்கினாள் நித்யா.

வீட்டுக்கு சென்றாலும் அவளுடைய ரூமுக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டு போனிலே செலவழிக்க தொடங்கினாள் நித்யா.

அதனால் அப்பாவுக்கும் இவளுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சம் பெரியதாய் ஆனது.

வழக்கம் போல அன்னைக்கும்  தாமதமாய் வீட்டுக்கு வந்தாள் நித்யா. அவளுக்காக பாலகுமார் தூங்காமல் காத்து கொண்டிருந்தார்.

"அம்மாடி அப்பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்று சொன்னார் பாலகுமார்.

"என்ன பா என் கிட்ட போய் இப்படிலாம் கேக்குறீங்க." என்று சொன்னாள் நித்யா.

"இல்ல மா நீ கொஞ்சம் பெரிய பொண்ணாயிட்டா போல  தோணிச்சு அதான் கேட்டேன்" என்றார் அப்பா.

நித்யா அப்பா அருகில் வந்து
"அப்படிலாம் இல்ல பா. எப்பவுமே நான் சின்ன கொழந்தை தான் உங்களுக்கு. சொல்லுங்க பா எதோ சொல்லனும்னு சொன்னீங்க."

"இல்ல மா. இப்பலாம் நீ அப்பா கூட உட்கார்ந்து சாப்டுறது இல்ல சரியா பேசுறது இல்ல. அப்பலாம் அப்பா கூட வந்து பேசுவ விளையாடுவ அதெல்லாம் இப்ப இல்ல. நீ எப்போவுமே அப்பா மடியில கொஞ்ச நேரம் தூங்குவ இப்பலாம் வந்ததும் ரூமுக்கு போய்டுற. எப்பவுமே போன்லயே இருக்கே. நீ வேலை விசயமா அதிகம் உழைக்குரனு விட்டுட்டேன் மா. ஆனா அப்பா அனாதையாய் ஆகிட்ட போல தோணிச்சு மா. அப்பா மடி உன் தலைக்காக ஏங்குதுமா" என்று அப்பா கண்களில் லேசான கண்ணீரோடு வெள்ளந்தியாய் சொன்னார்.

அப்பாவின் பேச்சைக் கேட்டு ஆடிப்போய்விட்டாள் நித்யா. நித்யாவின் கண்களிலும் லேசாய் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

"அப்படிலாம் இல்லை பா கொஞ்சம் வேலை அதிகமா இருந்துது பா. அதான் அப்படி நடந்துடிச்சி" என்று பொய் சொல்லிவிட்டு "இனிமேல் நடக்காம பார்த்துக்குறேன் பா"  என்று வாக்கு கொடுத்தாள்.

அவர் கண்ணை துடைத்துக்கொண்டே"சரி சரி மா... அப்பாவும் அதே தான் நெனச்சேன். இருந்தாலும் மனசுல பட்டத சொல்லிடணும்னு சொன்னேன் மா. அப்பாவ தப்பா நெனைக்கலையே"  என்றார் லேசாய் புன்னகைத்தார் பாலகுமார்.

"ச்சே... ச்சே.... அதலாம் ஏதும் நெனைக்கல பா." என்றாள் நித்யா.

கொஞ்ச நேரம் அப்பாவின் மடியில் படுத்துவிட்டு அவனுடன் பேச அவளுடைய ரூமுக்குள் சென்று விட்டாள் நித்யா.

பாலகுமார் நடந்ததையெல்லாம் யோசித்துக்கொண்டே இருந்ததால் அவருக்கு சோகம் அதிகமாகி நெஞ்சை அடைப்பது போல் ஒரு வலி ஏற்பட்டது.

பாலகுமாருக்கு புரிந்தது தனக்கு எதோ நேர போவதாய். வலி அதிகமாகி கொண்டே இருந்ததால் அவரால் நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டார்.

தன் மகளை கத்திக்கத்தி  கூப்பிட்டார் அவள் கதவை அடைத்துக்கொண்டு போனில் பேசிக்கொண்டிருந்ததால் இவருடைய கத்தல் அவளுக்கு சரியாய் கேக்கவில்லை.

அவர் சட்டை பாக்கெட்டில் மொபைல் இருந்ததால் அவளுடைய தொலைபேசிக்கு அழைத்தார் அழைப்பு வெயிட்டிங்கிலிலே சென்றது அவள் ஆர்வமாய் பேசியதாலோ என்னவோ அப்பாவின் அழைப்பை கவனிக்கவில்லை.

அப்பாவுக்கு புரிந்து விட்டது தனக்கு ஏதோ விபரீதம் நடக்கு போகிறது என்பது.

உடனே வாட்சப்பை எடுத்தார் ஏதோ ரெகார்ட் பண்ணி தன் மகளுக்கு அனுப்பிவிட்டு மயக்கமடைந்தார்.

சில நிமிடங்கள் கழித்து போனை வைத்துவிட்டு பார்க்கும்போது அப்பாவிடம் இருந்து போன்வந்ததை அப்போது தான் பார்க்க நேரிட்டது. ஏன்..? இவர் இந்த நேரத்தில போன் செய்தார் என்ற குழப்பத்துடனே ரூமை விட்டு வெளியே வந்தாள்.

அப்பா ஹாலில் மயக்கமடைந்த சூழ்நிலையில் இருந்தார். பதறியபடி ஓடி வந்து அப்பாவை எழுப்பினாள் நித்யா. அவர் எழுந்திருக்கவில்லை. தண்ணி தெளிச்சும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனே ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்து அவரை ஆஸ்பிடலுக்கு கொண்டு சென்றாள் நித்யா. மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக. தெரிவித்தார். அதிர்ச்சியில் உறைந்ததால் அவளுக்கு அழுகையே வரவில்லை. அவர் இறந்ததற்கு காரணம் அவர் சரியாக உணவு சாப்பிடாதததும் மாத்திரையை  உட்கொள்ளாததும் என்று தெரிவித்தார் டாக்டர்.

ஈம கடமைகளை முடித்து விட்டு ஒவ்வொருத்தராய் வீட்டில் இருந்து சென்று விட்டார்கள். தற்போது வீடே வெறுமையில் சூழ்ந்து இருந்தது.

தன் தொலைபேசியை பார்க்க இரண்டு நாட்களுக்கு பிறகு தான் அவளுக்கு நேரம் கிடைத்தது.
எடுத்து பார்க்கும்போது அப்பாவிடம் இருந்து ஒரு வாட்சப் ரெகார்ட் மெசேஜ் இருந்தது.

அதில் "அம்மா நான் போறேன் மா. அப்பா திரும்பி வரமுடியாத எடத்துக்கு போறேன் மா. வேல வேலைக்கு சாப்புடு. வீட்டுக்கு நேரத்தோட வந்துடு. அப்பா ஏதோதோ  இன்சூரன்ஸ் போட்டு வச்சிருக்கேன் அதலாம் கேட்டு வாங்கி உன் கல்யாணத்துக்கு வச்சிக்கோமா. நல்ல பையனா.." என்று தொடங்கும்போது வாட்சப் ரெகார்டர் கட் ஆகிவிட்டது.

"நான் காதலை விட்டு விட்டேன் பா நீங்க திரும்பவும் வாங்க" என்று அந்த ரெகார்டர்க்கு பதில் சொல்லி கதறி அழுதாள். "என் காதலை வச்சி உங்களை கொன்னுட்டேனே பா. நீங்க வந்துடுங்க பா. வாங்க பா... நீங்க வந்துடுங்க பா..." என்று கதறினாள். ஆனால் இறந்தவர்கள் திரும்ப வர போவதில்லை என்று அவளுக்கு தெரிந்தும் அவள் மனம் அதை உணர மறுத்துக் கொண்டிருந்தது. அவளுடைய அழும் குரல் அந்த வீடு முழுவதும் ஒலித்துக்கொண்டே இருந்தது.