Sunday, 27 December 2015

பணமும் பசியும் (சிறுகதை )

"யப்பாடா ஒரு வழியா இந்த பெரிய பிரச்சனையை (emergency fix) முடிச்சாச்சு. நாளைக்கு நம்ம கோட (code) டெலிவரி கொடுத்துடலாம் " என்று சொல்லிக்கொண்டே தலையிலிருந்த முடியை இரு கைகளாலும் கோதிக்கொண்டு பெரு மூச்சி விட்டான் ஜவஹர்.


அப்போது தான் அவன் கண்களுக்கு கணினியின் ஓரத்தில் உள்ள மணியை  பார்க்க நேரம் கிடைத்தது. பார்த்தவனுக்கு பேரதிர்ச்சி மணி நள்ளிரவு 12 ஆக இருந்தது.

"ஐயயோ! டைம் 12 ஆய்டிச்சே இன்னும் நம்ம டின்னர் கூட சாப்டுலையே" என்று பதறியபடி பைக் சாவியை எடுத்துக்கொண்டு ரூமுக்கு செல்ல தயாரானான்.

ஜவஹருடைய சொந்த ஊர் சேலம். அவன் போரூரில் நண்பர்களோடு ரூம் எடுத்து தங்கிக்கொண்டு கிண்டியில் உள்ள ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் கணிப்பொறியாளனாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அவனுடன் தங்கி இருக்கும் 3 நண்பர்களும் வெவ்வேறு கம்பெனியில் கணிப்பொறியாளராக வேலை செய்து வருகின்றார்கள்.

போகும் வழியில் எதாவது கடை இருந்தால் நிறுத்தி சாப்ட்டுக்கலாம் என்று முடிவெடுத்து வண்டியை வேகமாய் எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான். ஏனெனில் இந்த நேரத்தில் அலுவலகத்தில் சாப்பிட எதுவும் கிடைக்காது என்று அவனுக்கு தெரியும்.

போகும் வழியில் உள்ள கடைகளை நோட்டம் விட்டுக்கொண்டே சென்றான். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் அனைத்து கடைகளும் மூடி இருந்தது. சில கடைகளில் சமையல் செய்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார்கள்.

சாப்பிட எதுவும் கிடைக்காது என்று தெரிந்ததும் அவனுடைய வயிற்றுக்கு பசி அதிகம் எடுக்க ஆரம்பித்தது .

30 நிமிடத்தில் ரூமை அடைந்தான்.

ரூமுக்கு சென்றவன் நேராக குளிர் சாதன பெட்டியை திறந்து ஏதாவது பழம் இருக்குமா இல்லை வேற எங்கவாவது பிஸ்கட் பிரட் இருக்குமா என்று தேடினான். தேடிப்பார்த்து ஒரு பயனும் இல்லை. பேச்சுலர் ரூம் என்பதால் ரூமில் சாப்பிட எதுவும் இல்லை.

அவனுடைய நண்பர்கள் அனைவரும் நைட் ஸிப்ட்க்கு வேறு சென்றுவிட்டார்கள்.

இவனுக்கு பசி மேலும் மேலும்அதிகமாய் கொண்டே இருந்தது...

ரூமுக்கு சென்றவன் உடைகளை மாற்றிக்கொண்டு மீண்டும் உணவு வேட்டைக்கு பைக் எடுத்துக்கொண்டு கலம்பினான்.

பைக் எடுத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கும்போது ரோட்டின் ஓரமாய் ஒரு விளக்கு எரிவதை கண்டான். அநேகமாய் அது உணவு கடையாய் தான் இருக்கும் என்று முடிவு செய்து அதன் அருகில் தன் வண்டியை செலுத்தினான். அவன் செய்த அதிர்ஷ்டமோ என்னவவோ அது உணவு கடை தான்.

அங்கே ஒரு பெண்மணி தள்ளு வண்டியில் தோசையையும் இட்லியும் சுட்டு விற்றுக்கொண்டிருப்பது போல தெரிந்தது. ஆனால் கடையில் யாருமில்லை. ஒருவேளை இங்கேயும் எதுவும் கிடைக்கலனா இன்னைக்கு நான் அவ்வளவு தான் என்று நினைத்துக்கொண்டே கடையின் அருகே நெருங்கினான்

"என்ன வேணும் பா " என்று அந்த பெண்மணி கேட்டாள்.

"ஏதாவது சாப்ட இருக்குமா" என்று கேட்டான் ஜவஹர்.

"இட்லி தோசை இருக்கு பா " என்றாள்.

இவனுக்கு ஒரே ஆனந்தம்.

"அம்மா 4 இட்லி வச்சி கொடுங்கமா" என்று சொன்னான்.

இட்லி தட்டில் வச்சி  கொடுத்தும் அதை வேக வேகமாய் உண்ண ஆரம்பித்தான்.

"முட்டை தோச ஏதாவது வேணுமா பா " என்று கேட்டாள் அந்த பெண்மணி.

நட்ட நாடு இராத்திரியில் சூடான தோசையை நினைச்சு பாருங்கள். அதுவும் முட்டை தோசை.

"சூப்பர் என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே. 2 முட்டை தோச போடுங்கம்மா" என்று மகிழ்ச்சி பொங்க சொன்னான்.

ஒவ்வொரு முட்டை தோசையை அவள் சூடாய் சுட்டு கொடுக்க இவன் அழகாய் தின்று முடித்தான். வயிறு முழுவதும் அவனுக்கு நிறைந்தது.

அப்பொழுது தான் அவனுக்கு பளிச்சென்று கண்ணே தெரிய ஆரம்பித்தது.

கையை கழுவிக்கொண்டு பில் எவ்வளவு மா என்று கேட்டான்.

"50 ரூபா" என்றாள்.

"பசியே இல்லாமல் 500,1000 ரூபாய்க்கு கம்பனி ட்ரீட் என்ற பெயரில் அழித்தது அந்த நேரத்தில் அவனுக்கு ஏன் ஞாபகம் வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை."

"இந்த மகராசி நல்லா இருக்கணும்னு " என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டே பர்சை எடுக்க பேன்ட் பையில் கையை விட்ட அவனுக்கு இன்னொரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அவனது பேன்ட் பையில் பர்ஸ் இல்லை எங்க போனது என்று யோசித்தவனுக்கு ஞாபகம் வந்தது வீட்டுக்கு வந்து உடைகளை மாற்றும் போது பழைய பேன்ட் பையில் இருந்து பர்சை எடுக்க மறந்து விட்டான்.

பசி கொடுமை அதிகமாய் இருந்ததால் அவனுக்கு சோறு தவிர வேற எதுவும் அந்த நேரத்தில் ஞாபகம் வரவில்லை.

"வேற எங்கவாவது வைத்திருக்கோமா என்று 2 பாக்கெட் இருக்குர அரைக்கால் பேண்டில் 200 முறை தேடிவிட்டான்." எதுவுமே இல்லை.

அவன் தேடலை பார்த்துக்கொண்டிருந்த பெண்மணி "என்ன ஆச்சி பா " என்று கேட்டாள்.

"ஒன்னும் இல்ல மா வர அவசரத்தில் பர்சை எடுத்துக்கொண்டு வர மறந்து விட்டேன். நீங்க கொஞ்ச நேரம் கொடுத்தீங்கனா நான் போய் எடுத்துக்கொண்டு வந்துடுறேன் " என்று ரொம்பவும் மிகவும் தயங்கி கொண்டே சொன்னான்.


அதற்கு அந்த பெண்மணி "பரவாயில்லை பா நீ நாளைக்கு வந்து கொடு. மணி ஏற்கனவே 1மணி ஆக போகுது. " என்று சொன்னாள்.

இந்த பதிலை அவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அதை கேட்டதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே போனான்.

"ரொம்ப நன்றி மா " என்று கொஞ்சம் தூரம் வண்டியை எடுக்க நடந்தவன் ஏதோ யோசித்தவனாய் திரும்ப வந்தான்.

"அம்மா கேக்குரனேனு தப்பா நினைச்சிக்காதீங்க.. நான் இந்த கடைக்கு வருவது இதான் முதல் முறை. அப்புறம் எந்த நம்பிக்கைலமா நாளைக்கு வந்து காசு கொடுங்கன்னு சொல்றீங்க."

அதற்கு அவள் புன்னகைத்துக்கொண்டே  "தம்பி! இரவு 12 மணிக்கு மேல ஒருத்தன் சாப்ட வரானா அவன் ஏமாத்தணும்னு வர மாட்டான். உணமையிலேயே பசியோட தான் வருவான். அப்படி வரவங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும் அவங்களால பணத்த சாப்பிட முடியாதுனு.
பசியில பணம் மறந்து போகுறது ஒரு இயல்பான விஷயம் தான் பா. எனக்கு இது  நல்லாவே தெரியும். " என்று சொன்னாள்.

அந்த பெண்மணியை பார்த்து கை எடுத்து கும்பிட்டு மறுபடியும் நன்றி சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அந்த பெண்மணியின் அந்த வார்த்தைகள் அவனுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்க்கை பாடங்களை கற்று கொடுத்தது.


Monday, 21 December 2015

தோத்துப் போடா (பாடல்)


தோத்துப் போடா உன்ன தான்டா
நெறைய முறை தோத்துப் போடா  (தோத்துப் போடா....)

வாழ்க்கை இருக்கு நேரம் இருக்கு 
தோத்துப் போக மனசும் இருக்கு

தோற்பதால் வெட்கமில்லை
தோல்வியால் நஷ்டமில்லை

தோல்வியை நீயும் ரசித்துப் பாருடா
அது சொல்லும் கதை உனக்கு ஆயிரம் டா (தோத்துப் போடா....)

தேடி தேடி தோத்து போ
புது புது முறையில நீயும் தோத்து போ

தோல்வியும் வெற்றியும் ஆகுமே
நீ புது முறையில தினமும் தோத்தாலே

ஜெயிக்கும் போது இருக்கும் உறவு
தோற்கும் போது இருக்காது

சிரிக்கும் போது சிரித்த உறவும்
நீ அழுகும் போது கிடைக்காது

அதனால் (தோத்துப் போடா....)

தோல்விக்கு நீயும் காத்திரு
அதை அனுபவிக்க நேரம் பாத்திரு

வாழ்கையை நீயும் புரிஞ்சிக்கோ
அத தோற்று பார்த்து தெரிஞ்சிக்கோ (வாழ்கையை...)

தலைவனா ஆக தோற்கணும்
அறிஞனா ஆக தோற்கணும்
தலைக்கனம் குறைய தோற்கணும்
உன் மதிப்ப நீ தெரிஞ்சிக்க தோற்கணும் (தலைவனா....) (தோத்துப் போடா....)


Wednesday, 16 December 2015

சின்ன வயசு நினைவு (புரியாத வாழ்க்கை.)..



சின்ன வயசுல பள்ளிக்கூடம் பிடிக்கல பாடமும் பிடிக்கல
ஆனாலும் தினமும் போனேனே டீச்சரின் மேல் உள்ள பயத்திலே...

தேர்வும் பிடிக்கல அதை எழுதவும் பிடிக்கல - ஆனாலும்
எழுதினேனே அம்மா அப்பாவின் மேல் உள்ள பயத்திலே.....

வீட்டுல வாங்கி வச்சது சாப்பிட தோணல
வீட்டுல செஞ்சதும் புடிக்கல.
ஆனால் பள்ளிக்கு வெளில விக்கிற
ஆயா கையால சாப்பிட மட்டும் பிடிச்சிருக்கு
அது எப்படினு எனக்கும் புரியல.

அக்காவோ தங்கையோ அண்ணனோ தம்பியோ
எந்த வித்தியாசமும் பார்த்ததில்ல
யாரையும் ஒதுக்கி விளையாடியதில்லை
சண்டை வந்தா அடிச்சிக்காம இருந்ததில்லை.
அதிகமா அடி வாங்கிட்டா
அம்மாவிடமோ பாட்டியிடமோ
புகார் செய்ய தவறியதில்லை.

எந்த நாட்காட்டியில் யாரும் பதிவிடவில்லை
ஆனாலும் ஒரே நேரத்தில் ஊரே
ஒரே விளையாட்டு தான் விளையாடினோம்
அது எப்படினு எனக்கு புரிஞ்சியதில்ல
புரிஞ்சிக்கவும் முயற்சி செய்ததுமில்ல.


சரியாக கணக்கு தெரியாது-ஆனாலும்
திருடி தின்ன மாங்காயும் புளியங்காயும்
எலந்த பழத்தையும் பகிர்ந்து உண்ணும் போது
சண்டையே  வந்ததில்ல.

ஒரு சின்ன பசங்களையும் போலீஸ் கூப்பிட்டு மிரட்டியதில்லை
ஆனால் போலிஸ பார்த்து நான் ஏன் பயந்து பயந்து
தீவிரவாதி போல ஒடினேன்னு
இதுவரை எனக்கு விளங்கவில்ல ...!!

கை நிறைய காசு இருந்ததில்லை - ஆனால்
அதை காரணம் காட்டி ஊர் சுத்தாம இருந்ததில்ல.

பெரியவங்க யாரும் பள்ளிகூடத்துக்கு போனதில்ல - அதனால
சீக்கிரம் பெரியவனா வளர்ந்துடனும்னு
நினைச்சிகிட்டேஇருந்தேன்
இப்போ பெரியவனா வளர்ந்துட்டேன் - ஆனா
பள்ளிகூடத்துக்கு போகணும்னு மனசு துடிக்குது
அது எதுக்குன்னு எனக்கு இன்னும் புரியல.


காதல் தோல்வி (பாடல்).


மனம் என்ற ஒன்று
தினம் தினம் பாடாய் படுகிறதே..

காற்றை போல் உருவமில்லை
உணரத்தான் முடிகிறதே...

உன் விழிகளில் வழியும் நீரை
துடைக்க என் கைகள் துடிக்கிறதே

இது கனவா இல்லை நிஜமா
என புரியாமல் விழிக்கிறேன் விழிக்கிறேன். (மனம் என்ற ஒன்று..)

அவளை பார்த்த அந்த நொடி அந்த நொடி
என் ஆயுள் பாதி முடிந்ததேன் என்று தோன்ற வைத்ததே..

ஆனால் அந்த ஒரு நொடி ஒரு நொடி
எல்லாம் எல்லாம் கை மீறி போனதே போனதே போனதே..

வாழ்க்கை முழுவதும் உன்னோடு
வாழ ஆசை பட்டேன் நானே நானே

உன் வாழ்க்கையே முடிந்து போனது என்று
சொன்னாயே சொன்னாயே நீயே நீயே... (மனம் என்ற ஒன்று..)

உன் வாழ்க்கையும் என் வாழ்க்கையும் ஒன்றானதே
அது ஏன் இன்று இரண்டு துண்டானதே...!
அது ஏன் இன்று இரண்டு துண்டானதே...!

வாழவே  பிடிக்கவில்லை எனக்கு தான்  எனக்கு தான்
எமன் முன்னே போயி நின்றேன் சாக தான் நான் சாக தான்

தோல்விகள் என்னை துரத்தியதே
சாவிலும் என்னை விரட்டியதே விரட்டியதே.. (மனம் என்ற ஒன்று..).

Monday, 14 December 2015

புரிதலின் எல்லை (சிறுகதை)

நம்ம காதலை அப்பாகிட்ட எப்படி சொல்றது என்று  தெரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தாள் மைதிலி.

அங்கும் இங்கும் அலைந்தவாறு இரவெல்லாம் உறக்கமில்லாமல் தவித்தாள்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு  சாமியெல்லாம் கும்பிட்டு விட்டு அப்பா மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.

காலையில் அலுவலகத்திற்கு செல்ல தயாராய் இருந்த அப்பாவின் முன் பவ்யமாய் நின்றாள்.

அவளை பார்த்ததும் அப்பாவிற்கு புரிந்து விட்டது இவள் ஏதோ சொல்ல தயங்குகிறாள் என்று.

"என்னம்மா" என்று கேட்டார் மோகன்.

"ஒன்னும் இல்ல பா " என்று சொன்னாள்.

"பரவாயில்ல மா. சொல்லுமா" என்றார் மோகன்.

வாயிலிருந்து வார்த்தை வரவும் அதை முழுங்கவும் செய்து கொண்டே இருந்தாள்.

மிகவும் தயங்கி கொண்டே "இல்ல பா, என் கூட ரமேஷ் என்ற ஒருத்தன் வேல பார்க்குறான் பா. ரொம்ப நல்ல பையன்  பா. அவன் குடும்பமும் நல்ல குடும்பம் பா" என்றாள்.

"அதற்கு-மா" என்றார் மோகன்.

"எனக்கு அந்த பையன  பிடிச்சிருக்கு" என்று இழுத்தாள்.

"என்ன மா அந்த பையன காதலிக்கிறாயா?" என்றார்.

"இல்ல பா உங்களுக்கு பிடிக்கலேன்னா வேணாம் பா" என்றாள்.

மோகன் சிரித்துக்கொண்டே.

"5 மணிக்கு அவர நம்ம வழக்கமா போற ஹோட்டலுக்கு வர சொல்லுமா. பேசலாம். உங்க ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருந்தா கல்யாணம் பண்ணி வச்சிடலாம் " என்றார்.

அதை கேட்டதும் உள்ளுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி பறப்பது போல் ஒரே ஆனந்தம் அளவளாவிக் கொண்டிருந்தது.

இருந்தாலும் இந்த மாதிரி எதார்த்தமான வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை. பெரியதாய் அப்பா ஆர்ப்பாட்டம் பண்ணுவார் என்ற எதிர்பார்த்த அவளுக்கு ஏமாற்றம்.

உடனே ரமேசுக்கு போன் செய்து நடந்ததை தெரிவித்தாள். அவனுக்கும் பெரிய சந்தோசம்.

"சரியாய் 5 மணிக்கு நான் வந்துடுவேன் " என்றான்  மகிழ்ச்சி பொங்க.

"ஹே அப்பா பொருத்தம் சரியா இருந்தா தான் கல்யாணம் செய்யலாம்னு சொன்னாரு டா .. அதனால நான் என் ஜாதகத்த வாட்ஸ்ஆப்ல அனுப்புறேன். நீ ரெண்டு ஜாதகத்துக்கும் பொருத்தம் பாரு. சரியா இருந்தா விட்டுடு. இல்லைனா ரெண்டு பேருக்கும் பொருந்துற போல உன் ஜாதகத்த தயார் செஞ்சி எடுத்துட்டு வந்து அப்பா கிட்ட கொடுத்துடு" என்று சொன்னாள் மைதிலி.

அன்றைக்கு அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டு ஜாதகம் பொருத்தம் பார்க்க புகழ் பெற்ற ஒரு ஜோதிடரிடம் சென்றான்.

அவர் இரண்டு ஜாதகத்தையும் வாங்கி பார்த்தார்.

என்ன ஆச்சரியம் இரண்டு ஜாதகத்துக்கும் அத்தனை பொருத்தமும் சரியாய் இருந்தது.

அந்த சந்தோசத்தில் அந்த ஜோதிடர் கேட்ட தொகைக்கும் அதிகமாய் கொடுத்து நன்றி சொல்லிவிட்டு மைதிலிக்கு போனில் தகவலை தெரிவித்தான்.

அவளுக்கு பெரிய நிம்மதி.

மாலை 4.30 மணிக்கே ரமேசும் மைதிலியும் ஹோட்டலுக்கு சென்று மோகனுக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்.

சரியாய் 4.45 மணிக்கு மோகன் வந்தார். மோகனுக்கு ரமேஷை அறிமுகம் செய்தாள் மைதிலி..

தற்போது  மூன்று பேரும் சுற்றி அமர்ந்து கொண்டிருந்தார்கள். மைதிலி பதற்றத்தில் இருந்ததால் தன் நகத்தை பிய்த்துக்கொண்டிருந்தாள்.

அப்போது மோகன் பேச ஆரம்பித்தார்.

"நீங்க எத்தன வருசமா இந்த மொபைல யூஸ் பண்றீங்க" என்று மோகன் ரமேஸ் கையில் இருந்த ஆன்டிராய்டு மொபைலை காட்டி கேட்டார்.

அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னது சம்பந்தம் இல்லாமல் மொபைலை பற்றி கேட்குறார் என்று நினைத்துக்கொண்டே.
"1 வருஷம் அங்கிள்" என்று சொன்னான் ரமேஷ்.

"நீங்க எத்தன வருசமா காதலிக்கிறீங்க" என்றார்.

"3 வருஷம் அங்கிள் " என்றான் ரமேஷ்.

"இதுவரை ஏதாவது உங்களுக்குள் மறைத்து இருக்கிறீர்களா ?" என்று கேட்டார் மோகன்.

"எதுவும் மறைத்ததில்லை அங்கிள்" என்றான் ரமேஸ்.

"நீ எப்படி மா?" என்று மைதிலியை பார்த்து கேட்டார்.

"நானும் எதுவும் மறைத்ததில்லை  பா" என்றாள் மைதிலி.

"உங்க காதல் எவ்வளவு உறுதியானது என்று நினைக்குறீங்க?" என்று இரண்டு பேரிடமும் அந்த கேள்வியை முன் வைத்தார்.

"மைதிலிக்காக என் உயிரை கூட கொடுப்பேன் அங்கிள்" என்றான். அதே மாதிரி பதில் மைதிலியிடமும் இருந்தும் வந்தது.

"உங்க உயிரலாம் கொடுக்க வேண்டாம். உங்க இரண்டு பேரோட போன் மட்டும் கொடுங்க" என்றார் மோகன்.

இரண்டு பேரும் புரியாமல் விழித்தார்கள் எதுக்கு மொபைலை கேக்குறார் என்று.

இருந்தாலும் இரண்டு பெரும் தங்களுடைய மொபைலை அவரிடம் நீட்டினார்கள்.

அந்த இரண்டு மொபைலையும் வாங்கி கொண்டு ரமேஷ் மொபைலை மைதிலியிடமும் மைதிலி மொபைலை ரமேசிடம் கொடுத்தார் மோகன்.

கொடுத்துவிட்டு பேச ஆரம்பித்தார் மோகன் "எனக்கு ஜாதகம் ஜோசியம் மேலலாம் சுத்தமா நம்பிக்கை இல்ல. அதை பார்த்து நடந்த எவ்வளவோ கல்யாணம் தோல்வியில் முடிஞ்சத நான் பார்த்திருக்கேன்.
உங்கள் வருங்காலத்தில் பிரச்சனை வருவதற்கான மூலப்பொருள் நீங்க கையில் வைத்திருக்கிறீர்களே இந்த மொபைல் தான். அதனால் உங்க இரண்டு பேருடைய மொபைலையும்  நல்லா ஆராய்ந்து பாருங்க. பார்த்ததுக்கு அப்பறம் ஒரு மணி நேரம் கழித்து வந்து என்னிடம் உங்களுடைய முடிவை சொல்லுங்க. அந்த முடிவு படியே நடக்கலாம்".

"இதென்னப்பா சின்ன புள்ளதனமா இருக்கு ரமேஷ் என்னிடம் எதுவுமே மறைத்ததில்லை நானும் மறைத்ததில்லை " என்று வாதிட்டாள் மைதிலி.

"இருக்கட்டும் மா. ஒரு மணி நேரம் கழித்து இதே மாதிரி அப்பாவிடம் சொன்னால் நான் ரொம்ப சந்தோசப்படுவேன்"  என்று பதில் சொன்னார்.

இரண்டு பெறும் அதை ஆமோதித்து இரு வெவ்வேறு இடங்களில் தனிமையில் அமர்ந்து மொபைலை ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

ஒரு மணி நேரம் முடிந்தது.

இருவரும் மோகன் முன் வந்து நின்றார்கள். இருவடைய முகத்திலும் ஒரே இறுக்கம் காணப்பட்டது.

அவர் முன் உட்கார்ந்த பிறகு சில நிமிடங்கள் மெளனமாக இருந்தார்கள்.

"இப்ப உங்களுடைய முடிவை நான் தெரிஞ்சிக்கலாமா" என்றார் மோகன்.

இரண்டு பேருடைய முகத்திலும் இன்னும் மௌனம் மட்டுமே குடி இருந்தது.

பதில் இரண்டு பேரிடமும் இருந்து வரவில்லை.

மோகனுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்தது அதனால் சின்ன மெல்லிய சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார்.