Friday, 24 June 2016

அப்பா மார்பு (குறுங்கதை)

எப்பவுமே தன் அப்பா மார்பு மீது படுத்துறங்குவதை வழக்கமாக வச்சிருந்தாள் மகள். மகள் பிறந்து 9-ம் மாதம் தொடங்கி 1.5  வருடம் வரை அப்பாவின் மார்பு தான் அவளுடைய படுக்கையாக இருந்தது.

திடீரென அப்பாவிற்கு வெளிநாட்டு வேலை கிடைத்ததால் மகளை பிரிய முடியாமல் பிரிந்து சென்றார்...

இரண்டு வருடமாய் தொலைபேசியில் கூட அப்பாவிடம் மகள் பேசவில்லை. ஏன் என்று யாருக்கும் காரணம் புரியவில்லை. மகள் பேசாதது நரக வேதனையாக இருந்தது அப்பாவிற்கு.

இரண்டு வருடம் கழித்து வீட்டுக்கு திரும்பிய அப்பாவிற்கு பயம் அதிகமாக இருந்தது எங்கே நம் மகள் என்னை வெறுத்து இருப்பாளோ என்று..

என்ன நடக்க போகிறது என்று தெரியாமல் ஒரு வித அச்சத்துடன் வீட்டுக்குள் நுழைந்தார் அப்பா.

வீட்டுக்குள் சென்ற போது நள்ளிரவு நேராமானதால் நல்ல உறக்கத்தில் இருந்தாள் மகள். அப்பாவின் சட்டையை போட்டு அதன் மீது படுத்து இருந்தாள் மகள்.

அவள் அருகில் போய் படுத்தார் அப்பா.
 
மகள் தானாக  அப்பாவின் மார்பு மீது ஏறி படுத்துக்கொண்டு "வந்துட்டியா பா". என்று கேட்டுக்கொண்டே  அவளுடைய தூக்கத்தை தொடர்ந்தாள்.

அந்த வார்த்தையை கேட்டதும் அப்பாவின் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் துளிகள்  வேகமாக வெளி வந்தது. இரண்டு வருட ஏக்கம் ஒரே நாளில் தீர்ந்தது....

Saturday, 18 June 2016

பெண்கள்(ளே) ஜாக்கிரதை (சிறுகதை)

 பரணியின் வீட்டில் யாரும் இல்லாததால் மகாவை வீட்டிற்கு அழைத்தான். அவளும் அவன் மீது உள்ள காதலால் சரி என்று சம்மதித்து அவனுடன் வீட்டுக்கு சென்றாள்...

பரணி வீடு கோட்டை போல் இருந்ததை பார்த்து பிரம்மித்தாள்.

அவர்கள் வீட்டுக்குள் சென்ற நேரம் பார்த்து பரணியின் தொலைபேசி மணி அடிக்க "நீ வீட்ட சுத்தி பாரு மகா நான் பேசிட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே வந்து பேசினான்.

"மச்சி மகா வீட்டுக்கு வந்துருக்குடா.. இன்னியோட இவள முடிச்சிட்டு கழட்டி விட்ருவேன்டா.

கொஞ்சம் பயந்த பொண்ணு தான் நடந்தத வெளில சொல்ல பயப்படுவா அது நமக்கு ஒரு அட்வான்டேஜ். எவ்வளவு அலைய விட்டா. நல்லா அனுபவிக்கட்டும்." என்று போனில் அவன் நண்பனிடம் பேசி சிரித்துக்கொண்டிருந்தான் பரணி.

இவனை காணோம் என்று தேடி வந்த மகா பரணி பேசுவதைக் கேட்டுவிட்டாள்.

உடனே வீட்டுக்குள் ஓடிப்போய் வாயை மூடிகொண்டு ஓ-வென்று கதறி அழுதாள். என்ன செய்வதென்று யோசித்தாள். 

அவன் வீட்டுக்குள் உள்ளே வந்ததும் புன்னகை புரிந்தாள். அதை பார்த்ததும் "ஆஹா உசார் ஆய்ட்டாடா" என்று கிட்ட நெருங்கி முத்தம் கொடுக்க முயற்சி செய்யும்போது அவள் அவனுடைய மர்ம உறுப்பில் எட்டி உதைத்தாள். 

உதைத்த மறுகனமே அவன் நிலைகுலைந்து கீழே சரிந்தான்.

 கீழே விழுந்து "ஐயோ... ஐயோ.... வலிக்குதே..." என்று கத்தினான். 

இதுதான் தப்பிக்க சரியான சந்தர்ப்பம் என்று கருதி ஓடிப்போய் அவளுடைய பையை எடுத்துக்கொண்டு ஓடி கதவைத் திறக்கும் போது அவனை திரும்பி பார்த்தாள்.

அவன் வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் மனசு கேக்காமல் திரும்பி அவனிடம் வந்தாள். 

அவள் கை பையை பக்கத்தில் வைத்துவிட்டு "ஹே சாரிடா சாரிடா.. வலிக்குதா.. நான் உன்னை எவ்வளவு லவ் பண்றேனு தெரியுமா?" என்று சொல்லிக்கொண்டே அவன் தலையை தன் மடிமீது வைத்தாள் ..

"என்னடி இப்படி பண்ணிட்ட ரொம்ப வலிக்க்க்குதுடி" என்று அழுது கொண்டே மெதுவாய் கண்ணை திறந்து அவளை பார்த்து சொன்னான்.

அந்த நேரத்தில் அவள் கை பையில் இருந்த பெப்பர் ஸ்ப்ரே எடுத்து அவன் கண்ணில் அடித்தாள். 

அடித்துவிட்டு சொன்னாள் "அமைதியான பொண்ணுனா அடங்கி போற பொண்ணு இல்லடா அடக்கிட்டு போற பொண்ணுங்கடா.... நீ அழிக்க நினைக்கறது ஒரு பொண்ணோட கற்ப இல்லடா ஒரு குடும்பத்தோட வாழ்க்கைய. இன்னொரு பொண்ண தொட நினைக்கும்போது இதலாம் உனக்கு ஞாபகம் வரனும் டா".என்று சொல்லிவிட்டு அவளுடைய கை பையை ஸ்டைலாய் மாட்டிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

Friday, 3 June 2016

எடக்கு முடக்கு (குறுங்கதை)

ஒரு காடு பக்கத்துல இருக்குற ஊர்ல எடக்கு முடக்கான பண்ணையார் ஒருவர் இருந்தார். அவர் எந்த கேள்விய கேட்டாலும் ஏடாகூடமாக தான் பதில் சொல்லுவார்.

அவரிடம் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் "ஐயா சாப்டீங்களா?" என கேட்டார். 

அதற்கு பண்ணையார் "நான் சாப்டுவேன் சாப்ட மாட்டேன். அத கேக்க நீ யாரு?" என்று திமிராய் பதில் சொன்னார்.

இன்னொரு நாள் "ஐயா எங்க வெளில போறீங்களா?" என கேட்டார் வேலையாள். "நான் வெளில போவேன் போ மாட்டேன். அத கேக்க நீ யாரு?" என ஏடாகூடமாய் பதில் சொன்னார்.

இந்த எடக்கு முடக்கான பேச்சு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே சென்றது... அந்த வேலையாளால் இதற்கு எதுவுமே செய்ய முடியவில்லை.
ஒரு காலை வேலையில் பண்ணையார் காட்டை சுற்றி பார்க்கும்போது எதிர்பாராமல் புதைக்குழியில் விழுந்து விட்டார்.

அவர் "காப்பாத்துங்க... காப்பாத்துங்க..." என்று கத்தினார்.

அந்த வழியாய் அவருடைய பணியாள் நடந்து வந்தார்.

அவனை பார்த்து "நல்ல வேல நீ வந்த காப்பாத்துடா காப்பாத்துடா" என கேட்டார்.

அதற்கு அந்த வேலையாள் "நான் காப்பாத்துவேன் காப்பாத்தமாட்டேன். அத கேக்க நீ யாரு ?" என கேட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்...