Sunday, 28 February 2016

மகனின் அறிவுரை (சிறுகதை)

"சிறப்பு தரிசனம் போயும் சாமிய சரியா பார்க்க முடியலையேங்க. எவ்வளோ கூட்டம்...!".. என்று பெரூ மூச்சு விட்டுக்கொண்டே வருத்தத்தோடு சொன்னால் மேகலா. "உண்டியில காசு போடுற இடம் கூட ஓரே கூட்டம். நல்ல வேலை நம்ம போடணும்னு நினைச்ச காசை கஷ்டப்பட்டு போட்டுட்டேன் " என்று அவர் பங்குக்கு பேசினார் கார்த்தியின் அப்பா.

மொத்தம் 7 பேர் இருந்தார்கள் காரினுல் அவர்களின் உறவினர்கள் 4 பேரையும் சேர்த்து. இவர்கள் அனைவரும் ஒரு புகழ் பெற்ற கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்கள்.


இவர்கள் பேசுறது எதுவுமே காதில் விழாதது போல காரின் ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்தி.

ஒரு முதியவர் ரோட்டை கடக்க முடியாமல் திண்டாடுவதை பார்க்கிறான் கார்த்தி...

 "அப்பா ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துங்களேன்" என்றான் கார்த்தி.

"ஏன்?" என்று கேட்க "வண்டிய நிறுத்துங்கப்பா ப்ளீஸ்" என்று மறுபடியும் சொல்றான் கார்த்தி.

வண்டியை நிறுத்தியவுடன் இறங்கி வேகமாய் ஓடிப்போய் அந்த முதியவரிடம் "என்ன ஐயா ரோட்டை கிராஸ் பண்ணனுமா" என்று கேட்கிறான்.

"ஆமாம் தம்பி ரொம்ப நேரமா நிக்கிறேன். வண்டியே நிற்க மாட்டது" என்று பரிதாபாமாய்   சொன்னார் தாத்தா .
சரி தாத்தா "நான் கிராஸ் பண்ணி விடுறேன்" என்று சொன்னான் கார்த்தி.

"சரி தாத்தா மணி 7 ஆக போகுதுஇந்த நேரத்துல எங்க போறீங்க" என்று கேட்டான்.
"இல்ல தம்பி காலைல இருந்து என் மனைவிக்கு உடம்பு சரியில்ல அதனால எதாவது காசு கிடைக்குமானு பார்க்க போறேன் நைட்டு சாப்டணும்ல." என்று சொன்னார்...

"ஒ அப்படியா..! " என்று சொல்லிக் கொண்டே "யார்கிட்ட காசு கேக்க போறீங்க" என்று கேட்டவுடன் சிறிது அமைதியாய் இருந்தார் தாத்தா.

ஏன் அமைதியாய் இருக்கிறார் என்று அவர் மாட்டி இருந்த பையை பார்க்கும் போது அவர் பிச்சை எடுக்கிறார் என்பது அவனுக்கு புரிந்தது.

"ஒரு நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்" என்று கேட்டான் கார்த்தி.
அதற்கு "30 ரூபா விலிருந்து 50 ரூபா வரை கிடைக்கும் தம்பி" என்று சொன்னார் தாத்தா.
சிறிது யோசித்தவன். ஒரு நிமிஷம் இருங்க சொல்லி விட்டு அப்பாவிடம் ஓடினான்.

"அப்பா 200 கொடுங்க" என்றான்.

"ஏன்டா" என்று கேட்டார்.

"கொடுங்க பா" என்றான்.

"நீங்களும் என் கூட வாங்க பா" என்றான்.

"எங்கடா எதுக்குடா" என்று கேட்டார் அப்பா.

"வாங்க பா ப்ளீஸ்" என்றான் கார்த்தி.

எதுக்குன்னு புரியாமல் அப்பா அவன் பின்னாடியே போறார்.

அவன் அந்த முதியவர் முன்னாடி அப்பாவை கூப்பிட்டு கொண்டு போய் இந்த 200 ரூபாவை அவரிடம் கொடுத்து கொடுக்க சொல்றான்.

"தாத்தா இவர் என் அப்பா உங்கள பத்தி சொன்னதும் வந்தார். இந்தாங்க இந்த காசை வாங்கி கொண்டு போய் எதாவது சாப்டுங்க  அப்புறம் உங்க மனைவிக்கு எதாவது மாத்திரை வாங்கி கொண்டு போங்க". என்று சொன்னான் கார்த்தி.

நடப்பதை நம்ப முடியாமல் மெல்லமாய் கை நீட்டினார். கார்த்தியின் அப்பா புரியாமல் காசை கொடுத்தார்.

அதை வாங்கிக்கொண்டு அழுது கொண்டே "நீங்க தெய்வம் சார். நீங்களும் உங்க குடும்பமும் எப்போதும் சந்தோசமா இருக்கணும் சார். ரொம்ப நன்றி தம்பி உங்களுக்கு. நான் வரேன் தம்பி வரேன் சார்" என்று மனசார வாழ்த்திட்டு தாத்தா அவர்களிடம் இருந்து விடை பெற்றார்.

தாத்தா பேச்சைக் கேட்டதும் அப்பா கொஞ்சம் ஆடி போய் விட்டார்.

"நீங்க கோயில்ல கொடுத்த காசுக்கு அந்த தெய்வம் திருப்பி எதாவது கொடுக்குமானு தெரியாது பா. ஆனால் இப்ப காசு கொடுத்தீங்களே அவர் கண்ணுக்கு நீங்க தான் பா தெய்வம். உதவி தேவைப்படுறவங்களுக்கு தான் செய்யனும் பா அது கடவுளானாலும் சரி" என்று சொன்னான் கார்த்தி.

அப்பாவிற்கு சுரீரென்று உரைத்தது.

அப்பா கார்த்தியை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். 

நடந்ததை காருக்குள் இருப்பவர்களிடம் சொன்னார் அப்பா. அனைவரும் சந்தோஷப்பட்டார்கள்.

அப்பா தன் மகனை எண்ணி பெருமை பட்டுக்கொண்டே கார் ஓட்டத் தொடங்கினார்.

Monday, 15 February 2016

உயிர் கொடுத்த குழந்தை (சிறுகதை)

"நம்ம இரண்டு பேரோட உயிர கொடுத்தாவது நம்மளோட பிள்ளைய காப்பத்தனுங்க. சரியா" என்று கணவன் மருதனிடம் கேட்கிறாள் காமாட்சி.

"அதுக்கு தான் மா நம்மள இந்த ஆண்டவன் அனுப்பிருக்கான்" என்று சொல்லிக்கொண்டே மனைவியின் கன்னத்தை செல்லாமை கிள்ளுகிறான்.

"நம்ம குழந்தை என்ன எப்போ அம்மான்னு கூப்பிடும்னு மனசு ஏங்குதுங்க. அப்படி கூப்பிட்டா நான் பிணமா இருந்தா கூட எழுந்துடுவேன்" என்று சொல்கிறாள் காமாட்சி.

அந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை லேசாய் எட்டி உதைத்து தன் சந்தோசத்தை வெளிபடுத்தியது.

"என்னங்க பாருங்க வயித்துல உங்க குழந்தை ஓவரா துள்ளுது. கொஞ்சம் கண்டிச்சி வையுங்க" என்ற செல்லமாய் சிணுங்கி கொண்டேசொன்னாள் காமாட்சி...

அவன் மெல்லிய புன்னகை புரிந்து அவளுடைய வயிற்றில் அழகிய முத்தம் ஒன்றை கொடுத்தான்.

4 வருடத்திற்கு பிறகு மனைவி கர்ப்பமானதால் அவளை கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொள்கிறான் மருதன்.

ஒரு சிறு வேலை கூட வாங்காமல் அனைத்தையும் இவனே இழுத்து போட்டு செய்கிறான்.

காலையில் வீட்டை பெருக்கி கோலம்போடுவது முதல் இரவு சாப்பிட்ட தட்டை கழுவி வைப்பது வரை அனைத்து வேலையும் இவன் மட்டுமே செய்கிறான். மனைவிக்கு உட்கார்ந்த இடத்திலே அனைத்தும் வந்து சேர்ந்து விடுகிறது.

பாசத்தால் செய்தது விபரிதத்தில் கொண்டு போய் விடும் என்பதை அவன் உணரவில்லை.

காமாட்சிக்கு பிரசவ வலி வந்ததால் உடனே ஆட்டோவை பிடித்து மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து சென்றான்.

அவள் வலியால் துடிதுடித்து கத்திக்கொண்டிருந்தாள். அதை பார்த்த அவனுக்கும் கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

"ஒன்னும் இல்ல மா கொஞ்சம் பொறுத்துக்கோ பொறுத்துக்கோ" என்று மனைவியை சமதானப்படுத்திக்கொண்டே இருந்தான்.

பிரசவம் பார்க்கும் அறைக்கு மனைவியை அழைத்து சென்றார்கள்.

அங்கு டாக்டர் அவன் மனைவியை பரிசோதித்து விட்டு "பிரசவம் ரொம்ப சிக்கலாகவும் கடினமாகவும் இருக்கு. குழந்தை கொடி சுத்தியும் தலை திரும்பாமலும் இருக்கு" அதனால ஏதாவது ஒரு உயிர தான் காப்பாத்த முடியும் என்று மருதனிடம் சொல்கிறார் டாக்டர்..

அதை கேட்டதும் அவன் கதறி அழுகிறான். டாக்டர் எப்படியாவது இரண்டு உயிர்களையும் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறான்.

"முயற்சி செய்கிறோம் ஆனால் அதற்கு வாய்ப்பு இருப்பதை தெரியவில்லை" என்று சொல்கிறார் டாக்டர்...

மருத்துவமனை பணியாளர்கள் காட்டும் அத்தனை இடத்திலும் மருதன் கை எழுத்து போட்டு கொடுத்ததும் டாக்டர் அறுவை சிகிச்சை செய்ய உள்ளே செல்கிறார்.

குழந்தையை வெளியே எடுக்க வயிற்றை அறுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தார் டாக்டர்.

குழந்தை வெளியே வர வர அம்மாவின் இருதய துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

குழந்தை மொத்தமாய் வெளியே வருவதற்குள் அம்மாவின் இதய துடிப்பு மொத்தமாய் அடங்கி விடுகிறது.

"குவா..... குவா" என்று அழுந்து கொண்டே குழந்தை வெளியே வருகிறது.

குழந்தையை கழுவிய பின் மருதனுக்கு ஆண் குழந்தையை வெளியே எடுத்து கொண்டு வந்து காண்பிக்கிறார்கள். உங்கள் மனைவி இறந்து விட்டார்கள் என்பதையும் அவனிடம் அறிவிக்கிறார்கள்.

அவன் அதை கேட்டு மனமுடையவில்லை. இந்த குழந்தையை என் மனைவி அருகில் சிறிது நேரம் படுக்க வையுங்கள் என்று சொல்கிறான். ஏன் இப்படி சொல்கிறான் என்று அவர்களுக்கு புரியவில்லை இருந்தாலும் அவன் சொன்னதை போலவே அவர்களும் செய்கிறார்கள்.

குழந்தை அம்மா அருகே படுத்துக்கொண்டு அமைதியாய் விளையாடிக்கொண்டிருந்தது. அம்மாவை எட்டி உதைத்தும் கையால் தடவியும் ஏதோ செய்து கொண்டிருந்தது ஒரு வேலை அம்மா இறந்தது தெரிந்து குழந்தை அம்மாவை எழுப்பவதை போல இருந்தது. சுற்றி இருந்த டாக்டருக்கும் மற்ற பணியாளரும் அந்த நெகிழ்ச்சியான நிகழ்வை கண்ணில் பார்க்கும்போது யாராலையும் அவர்களுடைய கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

காமாட்சியின் உடலை கொண்டு போகவும் ஸ்ட்ரெச்சர் வந்தது. குழந்தையை அம்மாவிடமிருந்து தூக்கிட்டு போக நர்ஸ் அருகே சென்றாள். தூக்க 1 வினாடி இருக்கும்போது குழந்தை அம்...மா ...... அம்.........மா. அம்.........மா என்று அழ ஆரம்பித்தது.

அதை கேட்டவுடன் காமாட்சியின் உடலிடம் லேசாய் அதிர்வுகள் தெரிய ஆரம்பித்தது. "டாக்டர் இங்க பாருங்க" என்று நர்ஸ் அழைத்தாள். சட்டென்று இதயம் துடிக்க ஆரம்பித்தது.  டாக்டரால் நம்ப முடியவில்லை இங்கே என்ன நடக்குறதென்றே ... பிறந்த குழந்தையால் எப்படி அம்மாவென்று சொல்ல முடியும் இறந்த அம்மாவின் உடம்பில் எப்படி அசைவு தெரிகிறதென்று என்று அவருக்குள் கேள்வி கேட்டும் அந்த ஆச்சரியத்தை சுற்றி இருந்த பணியாளர்களிடமும் கேட்டு வெளிபடுத்தினார் .

உடனே நாடித்துடிப்பை சோதித்தார். சீராக ஆரம்பிப்பது போல இருந்தது.. குழந்தை அம்...மா ...... அம்.........மா. அம்.........மா என்று நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தது.

அந்த குரல் காமாட்சியின்  உடல் நிலையை சீராக்கி கொண்டே இருந்தது. டாக்டரும் பணியாளர்களும் கண்ணில் காண்கின்ற காட்சி உண்மையா என்று சோதித்துக்கொள்ள அவர்களை அவர்களே கிள்ளிக்கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் கண்களை திறந்து "என் குழந்தை எங்கே" என்று கேட்டாள் காமாட்சி.

லேசாய் ஆச்சரியம் கலந்த பயத்துடன் அவளுடைய அருகில் இருந்த குழந்தையை எடுத்து அவளிடம் கொடுத்தாள் நர்ஸ்.

குழந்தையை ஆர்வத்தோடு வாங்கி ஆனந்த கண்ணீரோடு முத்தத்தை வாரி கொடுக்கிறாள் காமாட்சி. முத்தத்தை கொடுத்த மறு வினாடியே அழுது கொண்டிருந்த குழந்தை சிரிக்க ஆரம்பித்தது . பணியாளர்கள் ஆனந்த கண்ணீரோடு சிரித்துக்கொண்டே வெளியே வந்து மருதனிடம் நடந்ததை தெரிவிக்கிறார்கள்.

மருதன் உள்ளே ஓடிப்போய் மனைவியையும் குழந்தையும் பார்த்து அழுகிறான். எனக்கு தெரியும் நம்ம குழந்தை உன்னை காப்பாத்திடும்னு அதனால தான் நம்ம குழந்தைய உன் பக்கத்துல படுக்க வைக்க சொன்னேன் என் நம்பிக்கை வீண் போகவில்லை நன்றி கடவுளே என்றுச் சத்தம் போட்டு அழுது கொண்டே சிரிக்குறான்.

அந்த ஒரு உயிரில் தான் 2 உயிரும் இருந்திருக்கிறது என்று டாக்டருக்கு அப்பொழுது தான் புரிந்தது... அவர்களை தனியே விட்டு விட்டு சிரிப்போடு சேர்ந்த கண்ணீர் துளியோடு அவரும் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.


Thursday, 11 February 2016

பேச ஆட்கள் தேவை (சிறுகதை)


"டேய் பாலாஜி. பிறந்த நாள் வாழ்த்துக்கள் டா" என்று வாழ்த்துக்களையே அதட்டலாக பாலாஜியிடம் தெரிவித்தார் அப்பா..

"இந்தா காசு. இத செலவுக்கு வச்சிக்கோ. போகும்போது போற வழியில இருக்குற நம்ம தாத்தாவுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துட்டு அப்புறம் ஊர் சுத்த போ" என்றார் அப்பா.

"காசையும் ஆசிர்வாதத்தையும் ஒரு சேர வாங்கி கொண்டு" அப்பாவிடமிருந்து விடை பெற்றான் பாலாஜி.

ஹோட்டலில் தாத்தாவுக்கு சாப்பாடை வாங்கிக்கொண்டு அவரோட வீட்டுக்கு விரைந்தான்.

வீட்டுக்குள் நுழைந்து தாத்தாவை தேடினான். அவர் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தார்.

அவர் அருகில் சென்று "இந்தாங்க தாத்தா சாப்பாடு" என்றான் பாலாஜி.

சாப்பாட்டை வாங்கி கொண்டு அவன் முகத்தையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.

"என்ன தாத்தா உங்களுக்கு வேற எதனா வேணுமா" என்று  கேட்டான் .

"ஆமாம்" என்று லேசாய் தலையாட்டினார் .

"என்ன வேணும்னு சொல்லுங்க வாங்கி தந்துட்டு போறேன்" என்று வேண்டா வெறுப்பாய் கேட்டான் பாலாஜி.

"நீ என்கிட்டே ஒரு 10 நிமிஷம் பேசுறியா" என்று மெல்லிய குரலில் கேட்டார்.

அதை கேட்டதும் பாலாஜியின் மனது அதிர்ந்தது.

"என்ன சொல்ல வரீங்க" என்று தெளிவு படுத்த மறுபடியும் கேட்டான்.

"இல்ல என்கிட்டே ஒரு 10 நிமிஷம் பேசுறியானு கேட்டேன்" என்றார் தாத்தா.

ஏன் இப்படி சொல்றார்னு அவனுக்கு புரியாமல்
"சரி" என்று தலையாட்டி விட்டு அவரிடம் இருந்து சிறிது தூரம் தள்ளி பேச அமர்ந்தான்.

பாலாஜியும் அவன் தாத்தாவும் பல விசயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது பாட்டி இறந்ததை பற்றி அவனிடம் பேசும்போது சோகத்தில் தாத்தா அழ ஆரம்பித்து விட்டார்.

"என்னடா இது வம்பா போய்டிச்சே" என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டு
"உங்களுக்கு என்ன நடிகர புடிக்கும்" என்று பேச்சை மாற்றினான் பாலாஜி.

கண்ணை துடைத்துக்கொண்டே "எனக்கு எப்பவுமே M.G.R தான் பா. அவரோட ஸ்டைலான நடிப்பும் அசத்தலான நடை உடை பாவனை எல்லாத்திலும் அவர் தான் பா டாப்பு. அவர நாங்கலாம் நடிகரா பார்த்ததில்ல கடவுளா தான் பார்த்திருக்கோம்" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்.

M.G.R பற்றி புகழ்ந்து கொண்டு இருக்கும் போது தாத்தாவின் கண்ணிலிருந்து கண்ணீரும் (ஆனந்த கண்ணீர்) உதட்டிலிருந்து மகிழ்ச்சியின் சிரிப்பும் ஒரு சேர வெளிவந்து கொண்டே இருந்தது.

சிறிது நேரம் கழித்து தான் நேரத்தை பார்த்தான். அதற்குள் அரை மணி நேரம் ஓடிப்போயாச்சி என்று பதறி "சரி தாத்தா" நான் கலம்புறேன்னு சொல்லிவிட்டு எழுந்து நின்றான்.

"என் கூட உட்கார்ந்து பேசியதற்கு ரொம்ப நன்றி பா " என்று இரு கரங்களை கை கூப்பி அவனுக்கு நன்றி தெரிவித்தார்.

தாத்தா  கை கூப்பி வணங்கியதும் அவனுக்கு மிகவும் சங்கடமாய் போனது. அதலாம் ஒன்னும் இல்ல என்பது போல தலையாட்டினான் பாலாஜி.

"இல்ல பா. அடுத்தவங்க கூட இவ்வளவு சந்தோசமாய் பேசி எத்தனை மாசம் ஆச்சின்னு எனக்கே ஞாபகம் இல்ல பா." என்று நா தழுதழுக்க சொன்னார் தாத்தா .

அவனால் அதற்க்கு மேல் பேச முடியவில்லை.தாத்தாவிடம் சைகையாலே கலம்புறேனு சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றான்.

வண்டியில் போகும்போது தாத்தாவின் பேச்சு அவனுக்கு ஞாபகத்துக்கு வந்து வந்து போனது. அப்போது தான் அவனுக்கு புரிந்தது முதியவர்கள் பேச ஆளில்லாமல் தவிக்கிறார்கள் என்று.

அப்பொழுதிலிருந்து பாலாஜி அடிக்கடி தாத்தா வீட்டுக்கு போய் பேச ஆரம்பித்தான். தாத்தாவும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தார். படுத்த படுக்கையாய் இருந்தவர் சந்தோசத்தில் வெளியே வந்து நடமாட கூட ஆரம்பித்து விட்டார்..

Sunday, 7 February 2016

சின்ன சின்ன கவிதைகள்


காதல் கவிதை...
======================================================
அழும் குழந்தை 
அம்மாவை பார்த்ததும்
சிரிப்பது போல 
நானும் 
உன்னை பார்த்ததும்
சிரிக்கிறேன்...!!!
======================================================
அறிமுகம் இல்லாத 
 உறவு இடம்
அன்பு கிடைக்கும் போது
வாழ்க்கை
அர்த்தமுள்ளதாய்
தெரியும்...!!!

======================================================

 நீ நடந்து போகையில்
தென்றலும்
உன்னை பின் தொடருகிறதே...!!!

======================================================

 உன்னை பிரிந்து இருக்க
முடிகிற என்னால்
மறந்து இருக்க
மட்டும் முடிவதில்லை
ஏனோ..
ஒருவேளை இது தான் காதலோ...


======================================================

நீ மனதில் மறைத்து
வைத்திருந்த காதலை
உன் கரு விழிகள்
எளிதில் காட்டிக்
கொடுத்து விட்டதடி...!!!

======================================================

அடக்க முடியாத கோபம்
அடங்கி போகும்
உன் முகத்தை
நான் கண்டாலே...!!!

======================================================


நீ அழகானவள் அல்ல
என் வாழ்க்கையை
அழகாக்க வந்தவள்...!!!

======================================================

ஆயிரம் ஆயிரம் சோகத்தை
அரை நொடியில்
மறக்கடிக்கிறது
உன் மடி மீது
நான் படுக்கும்போது...!!!

======================================================

லேசாய்  தூவும்
மழை சாரலில்
யாருமில்லா சாலையில்
இருவரும் கை கோர்த்து
போவதே அலாதி
இன்பம் தானே...!!

======================================================

என்ன பேசுகிறேன் என்று
தெரியவில்லை
ஆனால் உன்னுடன் பேசுகிறேன்
என்ற சந்தோசம் மட்டுமே
நிறைந்துள்ளது
என் நெஞ்சினில் ...!!!

======================================================

பேசவும் பிடிக்கவில்லை
பேசாமலும்
இருக்க முடியவில்லை
காதல் படுத்தும் பாடு...!!!

======================================================

என் மேல் உள்ள காதலை
நீ வெளிப்படுத்த
உன் வாய் திறந்து
சொல்லத்தேவையில்லை
உன் நாணமே போதுமடி பெண்ணே..!!!


======================================================

உன் முகத்தில்
விழுந்த மழைத்துளியை
துடைப்பதற்கு பதில்
ஆராய்ச்சி செய்கிறேன்
அது எப்படி
மழைத்துளி பனித்துளியாய்
மாறியது என்று...!!!

======================================================

நீ நின்ற இடம்
முழுவதும் ஆச்சரியத்தோடு
பார்க்கிறேன் உன்
கால்களும் அழகான
ஓவியத்தை வரைகிறதே என்று....!!!

======================================================

காதல் தோல்வி :

உன் நினைவுகளை
குற்ற உணர்ச்சியோடு
சுமக்கிறேன்
நீ அடுத்தவர் மனைவி
ஆன பின்னே...!!!!

======================================================

துன்பம் நிரந்தரமில்லை
என்று தெரிந்தும்
சோகமாய் இருக்கிறேன்
உன்னை நான்
பார்க்காமல் இருப்பதால்....!!!

======================================================

முதல் காதல்
என்றுமே இனிக்கிறது
ஒருவேளை அது
கை கூடாமல்
போனதாலோ ...!!!



======================================================


தெரியாத நட்பு....!
---------------------------
அன்பு காட்ட
அறிமுகம் தேவை
இல்லை
உணர்ந்தேனே
உன்னிடத்தில்....!!!

======================================================
நட்பு..

என் சோகத்தை கவனமாய் கேட்டு
மச்சி இதுக்கு கண்டிப்பாய்
நீ ட்ரீட் தந்தே ஆகணும்
என்று சோகத்தை திசை திருப்பும்
நண்பன் கிடைப்பதும்
ஒரு வரம் தான்...!!!!
======================================================

விழும் வேகத்தை விட
எழும் வேகம் அதிகமாய்
இருந்தால் தோற்கடிக்க அல்ல
உன்னை  பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்.

======================================================

Monday, 1 February 2016

அறிவும் ஆங்கிலமும் (சிறுகதை)

"ஹே மச்சி அதோ வரான் பாருடா விவேகன் என்ன சூப்பரா செமினார் எடுத்தான் ல. இவன் கிட்ட தான் நான் இங்கிலீஷ் டியூஷன் எடுத்துக்க போறேன்பா வேற யாருலாம் என் கூட சேர போறீங்க?" என்று சிரித்துக்கொண்டே மிக நக்கலாய் விவேகனின் காது பட ராகேஷ் கேட்டான்...

அவன் கேட்டதற்கு கூட இருக்கும் அனைவரும் கை தூக்கி விவேகனை கிண்டல் செய்தார்கள்.

அந்த நக்கல் பேச்சைக் கேட்டும் விவேகன் கோபப்படாமல் லேசான புன்னகை மட்டும் புரிந்து அவர்களை கடந்து சென்றான்.



அதற்கு காரணம் தமிழ் வழியாய் படித்த விவேகனுக்கு ஆங்கிலத்தில் செமினார் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தது. செமினார் முழுவதும் ஆங்கிலம் தெரியாத விவேகனின் பேச்சை வகுப்பே கிண்டலடித்தும் அதை பற்றி விவேகன் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்  1 மணி நேரம் முழுவதுமாய் அந்த செமினாரை எடுத்து முடித்தான். செமினார் எடுத்து முடித்ததும் அவனுடைய ஆசிரியர் விவேகனை வெகுவாக பாராட்டினார். அது மற்ற மாணவர்களுக்கு லேசாய் எரிச்சலை கிளப்பியது.

 பொறியியல் படிப்பில் 4 வருடம் முடியும் தருவாயிலும் அவனால் சரளமாய் ஆங்கிலத்தில் உரையாடாமல் போனது.

இறுதி ஆண்டு நெருங்கியதால் விவேகன் உட்பட அனைவரும் ப்ரொஜெக்டை முடித்து  கல்லூரி மேலாளருக்கு அனுப்பினார்கள்.. 

அதில் சில சிறந்த ப்ராஜக்டை கல்லுரி முதல்வர் தேர்ந்தெடுத்து அதை பெரிய பெரிய கம்பனிக்கு அனுப்பி வைத்தார். அதில் விவேகனுடைய ப்ராஜெக்ட் பெரிய அளவில் பேசும்படி இருந்தது. பல கம்பனிகள் அந்த ப்ரொஜெக்டை வாங்க போட்டி போட்டுக்கொண்டு அந்த கல்லூரிக்கு விரைந்தது. அதில் விவேகன் வகுப்பு மாணவர்கள் நினைக்கும் சில கனவு கம்பெனிகளும் அடங்கும்.

விவேகன் கூட படிக்கும் மாணவர்களுக்கு ஒரே ஆச்சரியம். "அறிவில்லாத இவன் எப்படி இந்த அளவு யோசிச்சிருப்பான் என்று".

அவர்களால் அந்த ஆர்வத்தை அடக்க முடியாமல் விவேகனை கும்பலாய் சூழ்ந்து கொண்டு  "ஹே மச்சி.. எப்படி டா இத பண்ண. எப்படி இந்த ப்ரொஜெக்டா யோசிச்ச. உனக்கு வேற யார்னா உதவி செஞ்சாங்களா." என்று  கேள்விகளை  அடுக்கினார்கள்.

"ஆங்கிலம் தெரியலனா அறிவு இவ்லாதவனு அர்த்தம் இல்லை டா. தமிழ தவிர வேற மொழியில ஆர்வம் இல்லாதவனு  அர்த்தம் டா" என்று அவர்களிடம் சொல்லிவிட்டு படத்தில் வரும் ஹீரோ போல அதே மெல்லிய உதிர்த்து நடந்து சென்றான்...